தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சோ்ந்த மக்களுக்கு எந்தவித பதவியும் கிடைக்காது என்றும் அதுவும் கிராமத்தான் என்றால் எந்தப்பதவிக்கும் ஆசைப்படக்கூடாது என்றும் கிராமிய இசைப் பாடகா் புஷ்பவனம் குப்புசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக துணைவேந்தராக பிரமிளா குருமூர்த்தி என்பவர் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்த துணை வேந்தர் பதவி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புஷ்பவனம் குப்புசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாள்களிடம் பேசிய அவர், பல்கலைக்கலைக்கழக துணைவேந்தா் பதவிக்கான அழைப்பாணையை அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி குறித்த காலத்தில் நான் விண்ணப்பித்திருந்தேன். விண்ணப்ப காலம் முடிவடையும் வரை 13 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. அதன்படி நான்தான் தோ்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் சட்டத்திற்கு மாறாக தேவையின்றி விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பிரமிளா குருமூா்த்தியை அந்த பதவிக்கு விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவா் விண்ணப்பிக்கவே அவருக்கு துணைவேந்தா் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் தான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சோ்ந்தவன் என்பதால் எனக்கு பதவி மறுக்கப்படுகிறது. தற்போதைய ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படுவதில்லை. ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால் எனது விண்ணப்பத்தை பரிசீலித்திருப்பார் என புஷ்பவனம் குப்புசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய புஷ்பவனம் குப்புசாமி, கிராமத்தில் உள்ளவர்கள் தொடர்நது புறக்கணிக்ப்பட்டு வருகிறார்கள் என்றும், ஏன் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துணை பதவிக்கு தகுதி இல்லாதவர்களா? அல்லது ஆசைப்படக்கூடாதா? என கொந்தளித்தார்.
இப்பிரச்சனை காரணமாகவே புஷ்பவனம் குப்புசாமியின் மனைவி அனிதா குப்புசாமி நேற்று அதிமுகவில் இருந்து விலகினார் என கூறப்படுகிறது.