தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழுமா? கவிழாதா? என்பது எடப்பாடியின் முடிவை பொறுத்துதான் அமையும் என கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பெங்களூர் புகழேந்தி கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
முதல்வர் எடப்பாடி பழனிசாமி யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் என்று பேசி வருகிறார். இவரை யாரும் மிரட்டவில்லை. மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. சசிகலாவின் தயவின் காரணமாகவும், அவர் அடையாளம் காட்டியதாலும் முதலமைச்சர் பதவியில் உட்கார்ந்தவர் எடப்பாடி பழனிசாமி.
இப்போது சசிகலா, தினகரன் இருவருமே வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அவர்களின் தயவும், உத்தரவும் இல்லாமல் இவர்களால் ஆட்சி நடத்த முடியுமா..? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
தேவைப்பட்டால் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால், இந்த ஆட்சி கவிழுமா? கவிழாதா? என்பது எடப்பாடியின் முடிவை பொறுத்தே அமையும்.
நடிகர் கமல்ஹாசன் முதல்வரை பதவி விலக சொல்கிறார். ஓ.பன்னீர்செல்வம் இந்த அரசை ஊழல் அரசு என குற்றஞ்சாட்டி வருகிறார்.
ஒரு நடிகருக்கு பயந்து கொண்டு அமைச்சர்கள் தங்களது இ.மெயில் முகவரியை அழிக்கலாமா? முதலில் அரசாங்கத்தின் இ.மெயில் முகவரியை மக்களுக்கு தெரிவியுங்கள். அதன் மூலம் மக்களின் புகார்களை தெரிந்து கொள்ளுங்கள்.
அமைச்சர் உதயகுமார் ஆவணி மாதத்தில் நல்ல நாள் குறிப்பதாக கூறுகிறார். கர்நாடக மாநிலத்தில் இருந்து இங்கு வந்து நான் குழப்பம் விளைவிப்பதாகவும் கூறுகிறார்.
உண்மையை சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. கர்நாடக மாநிலத்தில் ஒரு நல்ல செயலாளரை போடுங்கள் என்று ஆர்.பி.உதயகுமார் கூறுகிறார். தலைமை கழகத்தில் சில பொறுப்புகள் காலியாக இருக்கிறது. அதில், ஒரு பதவியை பெறுவதற்காகவே அவர் ஐடியா சொல்கிறார்.
தற்போதுள்ள அமைச்சர்களுக்கு பதவியை கொடுத்து அழகு பார்த்தவர் பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் இப்போது கஷ்டப்படுகிறார். நீங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு சவால் விடுகிறீர்கள். அனைவருக்கும் காலம் பதில் சொல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.