சின்னம் போனால் என்ன? கிண்ணம் போனால் என்ன! தேர்தல்ல நிக்குறோம், தொகுதியை தூக்குறோம்! என்று கித்தாப்பாய் பேசுமளவுக்கு இறங்கியடிக்க துவங்கிவிட்டது தினகரன் அணி.
இரட்டை இலை சின்னம் பன்னீர்-பழனி அணிக்கு சென்றதில் தினாவுக்கு ஏக வருத்தம்தான். ஆனாலும் இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு என்பதால் பெரிதாய் உடைந்து போகவில்லை அவர்.
‘ஒன்றரை கோடி கட்சி தொண்டர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக உள்ளனர். இந்த ஆட்சி மீது மக்களும் வெறுப்பாய் உள்ளனர். ஆனால் சில சக்திகளின் உதவியுடன் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறது இந்த ஆட்சி.
சின்னம் அவர்களுக்கு வழங்கப்பட்ட மறுநாளே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வருகிறதென்றால் சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள் என்னதான் செய்தாலும் மக்கள் மற்றும் தொண்டர்களின் அபிமானத்தை பெறாமல் தேர்தலில் எதுவும் செய்ய முடியாது.
ஆட்சி மன்ற குழுவின் அனுமதியுடன் ஆர்.கே.நகரில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டு அம்மாவின் தொகுதியை மீட்பேன்.” என்று சூளுரைத்திருக்கிறார்.
இந்நிலையில் அவரது ஆதரவாளர் புகழேந்தியும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினா வின் பண்ணியேவிட்டார் என்கிற அளவுக்கு பில்ட் - அப்களை ஏற்றியிருக்கிறார்.
“பன்னீர் செல்வத்தின் எதிர்ப்பை ஏற்றுத்தான் தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. ஆனால் இப்போது அதற்கு நேர் எதிராக தீர்ப்பை வழங்கி சின்னத்தை அவர்களுக்கே கொடுத்திருக்கிறார்கள்.
தொண்டன் கொதித்துக் கிடக்கிறான் இந்த முடிவால். பன்னீர் மற்றும் பழனிச்சாமியின் கைகளுக்கு சின்னம் போனதில் தொண்டனுக்கு விருப்பமில்லை. அதனால் ஆர்.கே.நகரில் தினகரனை ஜெயிக்க வைக்கும் முடிவுக்கு தொண்டன் வந்துவிட்டான். இதே உணர்வுதான் மக்களிடமும் இருக்கிறது.
இந்த இரண்டு கைகளும் இணைந்து அண்ணை எம்.எல்.ஏ.வாக்கியே தீருவது என்று தெளிவான உறுதியில் இருக்கிறார்கள். சட்டமன்றத்தினுள் சிங்கம் போல் நுழையப்போகும் தினகரன் கேக்டப்போகும் கேள்விகளிலும், கொடுக்கப்போகும் அழுத்தத்திலும் இந்த ஆட்சி துண்டைக்காணோம், துணியைக் காணோம் என்று ஓடப்போகிறது.” என்று கர்ஜித்துள்ளார்.
ப்பார்ரா! புகழ் புண்ணியத்துல செலவே இல்லாம ஆர்.கே.நகர்ல தேர்தல் நடந்து முடிஞ்சுடுச்சே!