புதுச்சேரி, தமிழகத்தில் பாஜகவின் நிலை என்னவென்று மக்களுக்குத் தெரியும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எடுப்பது வரலாற்று துரோகம் ஆகும். மருத்துவப்படிப்பில் இதை தரும் முடிவு அநீதியாகும். இதுபற்றி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்கும் ஆயத்த பணிகளை பாஜக செய்து வருவதாக நான் தெரிவித்தேன். பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி அதை மறுத்துள்ளார். உண்மையில் படிப்படியாக புதுச்சேரி மாநில அரசு அதிகாரங்களை மத்திய அரசு கையில் எடுக்கிறது. நிதி அதிகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். நில அதிகாரத்தையும் எடுக்க முயற்சிக்கிறார்கள். எதை எடுத்தாலும் ஒப்புதல் பெற வேண்டுமென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு? மாநில அரசின் சேவையை முடக்கப் பார்க்கிறார்கள். அதிகாரத்தைக் குறைத்து இணைக்க பார்க்கிறார்கள். அதை ஆதாரத்துடன் சொன்னதற்கு பாஜகவிடம் பதில் இல்லை.
பாஜகவில் பல அரசியல் கட்சி தலைவர்கள் இணையப் போவதாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். மக்களுக்கு புதுச்சேரியில் பாஜகவின் பலம், பலவீனத்தைத் தெரியும். புதுச்சேரி, தமிழகத்தில் பாஜக நிலை என்ன என்றும் மக்களுக்குத் தெரியும். புதுச்சேரி மக்களுக்கு துரோகம் விளைவிக்கிற கட்சிதான் பாஜக. புதுச்சேரிக்கான பல திட்டங்களை தடுத்துள்ளனர். பாஜகவை நம்பி புதுச்சேரி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். புதுச்சேரியில் பாஜக ஆட்சியைக் கொண்டுவருவோம், பாஜக தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளதாக சிலர் கூறுகிறார்கள். உண்மையில் பாஜக எங்கே இருக்கிறது என்று தேட வேண்டிய நிலைதான் இங்குள்ளது.” என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.