தமிழக அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் படம்.. பாஜக நிர்வாகி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By Asianet TamilFirst Published Apr 10, 2021, 10:06 PM IST
Highlights

தமிழக அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

தமிழக அரசு அலுவலகங்களில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, திருவள்ளுவர், அண்ணா, ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களின்  படங்களுடன் முதல்வர் படம் வைக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் படங்களும் கூட இடம் பெறுகின்றன. ஆனால், 1978ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கபட்டும் பிரதமர் படத்தை வைப்பதில்லை. இந்நிலையில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை  அரசு அலுவலங்களில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று கடலூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெயகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “1990ஆம் ஆண்டு அம்பேத்கர் படமும், 2006ஆம் ஆண்யில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ.உ.சிதம்பரம், காயிதே மில்லத், இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர், தமிழன்னை புகைப்படங்கள் வைக்க அனுமதித்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. தமிழக அரசு அரசாணை பிறப்பித்தும் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் படங்கள் புறக்கணிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது. “தேசிய தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்தப் புகைப்படங்களை வைக்க வேண்டும் என அந்த அரசாணையில் கட்டாயப்படுத்தவில்லை” என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.


இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என அரசாணை கட்டாயப்படுத்தாதபோது பிரதமர், குடியரசு தலைவர் படங்களை வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தது. மேலும் அந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.

click me!