
கேரள அனைத்துக்கட்சி குழுவை சந்திக்க பிரதமர் மோடி மறுத்துவிட்டதாக, முதல்-அமைச்சர் பினராயி விஜயன் சட்ட சபையில் தெரிவித்தார்.
அரிசி குறைப்பு
இது குறித்தது சட்டசபையில் அவர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-
‘‘கேரளாவுக்கு ஒதுக்கப்படும் பொது வினியோகத்திட்ட அரிசி அளவு குறைப்பு மற்றும் வறட்சி நிலைமையை சமாளிக்க நிதி உதவி கோருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை குறித்து, அனைத்துக் கட்சி குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது.
சந்திக்க மறுப்பு
மார்ச் 20 அல்லது 21-ந்தேதி அன்று இது குறித்து பிரதமரிடம் மனு கொடுப்பதற்காக நேரம் ஒதுக்கும்படி பிரதமர் அலுவலகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு இல்லாததால், மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சரை சந்தித்துப் பேசும்படி, பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது.
கடும் கண்டனம்
பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றபின்தான் இந்தப் பதிலை பிரதமர் அலுவலகம் அனுப்பி இருக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது.
அத்துடன் இது ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. பிரதமரை சந்திப்பதற்கு வேறு ஒரு தேதி எதையும் பிரதமர் அலுவலகம் பரிந்துைரைக்கவில்லை.
சர்வாதிகாரி
மாறாக, உள்துறை அல்லது நிதித்துறை அமைச்சரை சந்தித்துப் பேசும்படி அறிவுறுத்தப்பட்ட உள்ளது. இதன் பின்னணியில் உள்ள தர்க்க நியாயம் பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு பினராயி விஜயன் கூறி இருக்கிறார்.
உம்மன் சாண்டி
இந்த பிரச்சினையில் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான உம்மன்சாண்டியும் பிரதமர் மோடியின் அணுகுமுறையை விமர்சித்து இருக்கிறார். ‘‘சந்திக்க மறுத்ததற்குப் பதிலாக வேறு ஒரு தேதியை பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டு இருக்க வேண்டும்’’ அவர் கூறினார்.
கேரளாவின் ஒரே பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினரான ஓ.ராஜகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
வசதியான தேதி
‘‘இரு தரப்பு தலைவர்களும் இந்த பிரச்சினையை அரசியல் ஆக்குகிறார்கள். பிரதமர் அலுவலகத்தின் பதில் குறித்து விமர்சிப்பது சரியல்ல. பிரதமர் மிகவும் ‘பிசி’யானவர்.
மாநில அரசைப் பொருத்தவரை குறிப்பிட்ட தேதியை பரிந்துரை செய்வதை விட, வசதியான ஒரு தேதியை பிரதமர் அலுவலகத்திடம் இருந்து கேட்டு இருக்க வேண்டும்’’ என, ராஜகோபால் கூறினார்.