
கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள மாநிலத்தைப் புகழ்ந்தும், கர்நாடக மாநிலத்தில் திப்பு சுல்தாதைனைப் புகழந்தும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியிருப்பது, பாஜக மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்திற்கு வெள்ளிக்கிழமை சென்றிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந்த மாநிலத்தின் சிறப்புகள் குறித்து புகழ்ந்து பேசினார். அவர் கூறியதாவது-
‘‘கேரளா மனித வள மேம்பாடு, சுகாதார நலன் மற்றும் கல்வியில் நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.வெளிநாடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரங்களை இந்தியா கையாள கேரளமே தலைமை தாங்குகிறது. கேரளா இந்திய வர்த்தகத்தின் எல்லையாகவும் விளங்குகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ரோமானியக் கப்பல்கள் மலபார் கடற்கரைக்கு வந்தன. அரேபிய மற்றும் ஐரோப்பிய வணிகக் கப்பல்கள் மசாலாப் பொருட்களைத் தேடி கேரளாவையே வந்தடைந்தன.
கேரளத் துறைமுகங்களின் செயல்திறனையும், நெறிவழுவா நடைமுறைகள் குறித்தும் அவர்கள் எழுதியிருந்தனர். கேரள நிர்வாகிகளின் நேர்மையைப் பாராட்டுகிறேன்.
கேரள ஆயுர்வேத மையங்கள் நோயில் இருந்து மக்களை மீட்டெடுப்பதில் உலகளவில் புகழ்பெற்று விளங்குகின்றன. அவை மனதளவிலும் நோயாளிகளைப் புத்துணர்வாக்குகின்றன.
எத்தியோப்பியாவில் உள்ள ஏராளமான முன்னோடி பள்ளி ஆசிரியர்களை என்னுடைய பயணத்தின் போது கண்டேன். அவர்கள் கேரளத்தில் இருந்து வந்தவர்களே.கேரள மக்கள் தங்களின் கல்வியையும், அறிவையும் நம் நாட்டைக் கட்டமைக்கப் பயன்படுத்த விரும்புகின்றனர். என்று பேசியிருந்தார்.
பா.ஜனதா அதிருப்தி
கம்யூனிஸ்டு கட்சியினர் ஆட்சி நடத்தும் கேரள மாநிலத்தின் பெருமை குறித்து ஜனாதிபதி ராஜ் நாத் கோவிந் 2-வது முறையாக புகழந்து பேசியுள்ளார். இதற்கு முன் முதல்முறையாக கேரளாவுக்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், மதவேறுபாடின்றி மக்கள் ஒற்றுமையாக வாழ்வது பெருமையாக இருக்கிறது என்று பாராட்டி இருந்தார். கேரளாவில் பா.ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆகியவற்றுக்கும் கம்யூனிஸ்ட்களும் மோதல் இருந்து வரும் நிலையில், கம்யூனிஸ்ட் அரசை ராம்நாத் கோவிந்த் பெருமிதத்துடன் புகழ்ந்து பேசி இருப்பது பா.ஜனதா தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக, டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன
கடந்த மாதம் புரட்சியாளர் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய தீக்ஷா பூமிக்குச் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘‘அஹிம்சை, அன்பை போதிக்கும் புத்தரின் போதனைகளே தற்போதைய உலகுக்கு அவசியமானது'' என குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த 25-ம் தேதி கர்நாடகாவில் பாஜக, ஆர்எஸ்எஸ், சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் கடுமையாக எதிர்க்கும் திப்பு சுல்தானை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டிப் பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளத்தைப் புகழ்ந்துள்ள குடியரசுத் தலைவரின் பேச்சு பாஜக மட்டுமின்றி ஆர்எஸ்எஸ், சிவசேனா தலைவர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது