தூசு தட்டப்படும் பழைய வழக்குகள்..! தயாராகும் சிபிஐ, வருமான வரித்துறை..! திமுக புள்ளிகளுக்கு குறி..!

By Selva KathirFirst Published Aug 3, 2021, 10:47 AM IST
Highlights

 திமுகவின் கஜானாக்களில் ஒருவர் என்று கூறப்படும் எம்பியை முதலில் சிபிஐ குறிவைத்திருப்பதாக கூறுகிறார்கள். இதே போல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் நேரடியாக மோதி வரும் திமுக வின் மிக முக்கிய எம்பியின் செயல்பாடுகளும் சிறப்பு கண்காணிப்பில் உள்ளதாக சொல்கிறார்கள்.

மேற்குவங்க பாணியில் ஆளும் திமுக அரசுக்கு குடைச்சல்களை கொடுக்க அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் மீதான பழைய வழக்குகளை தூசி தட்டி கையில் எடுக்கும் பணிகளில் டெல்லியில் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் தமிழகத்தில் பாஜகவை மிக முக்கியமான அரசியல் கட்சியாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார் அமித் ஷா. அதனால் தான் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை மாநிலத் தலைவராக்கப்பட்டுள்ளார். இதே போல் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகனுக்கு மிக முக்கியமான இலாக்காக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பாஜகவை தமிழகத்தில் வலுவாக்கும் அதே அளவிற்கு ஆளும் கட்சியான திமுகவை பலம் இழக்கச் செய்வதும் அவசியம் என்று பாஜக மேலிடம் கருதுகிறது.

மேற்கு வங்கத்தில் கடந்த 2016 தேர்தலின் போது வெகு சொற்பமான எம்எல்ஏக்களே பாஜகவிற்கு இருந்தனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை வென்ற பாஜக, அடுத்து அங்கு ஆட்சி அமைக்கும் என்கிற அளவிற்கு வளர்ந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக எதிர்கட்சி அந்தஸ்தில் அமர்ந்துள்ளது. கடந்த முறையை காட்டிலும் பெருவாரியான இடங்களில் பாஜக எம்எல்ஏக்கள் வென்றனர். இதற்கு காரணம் கடந்த ஐந்து வருடங்களாக மம்தா அரசுக்கு கொடுத்த நெருக்கடிகள் தான்.

நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு வங்க மாநில அமைச்சர்களையே சிபிஐ கைது செய்தது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை வைத்து தான் மேற்கு வங்கத்தில் மம்தாவின் இமேஜை பாஜக டேமேஜ் செய்தது. இதற்கு வசதியாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நெருங்கிய உறவினர் முதல் கட்சியின் சீனியர்கள் வரை பலரை நிதி நிறுவன மோசடிவழக்கில் சேர்த்தது சிபிஐ. இதே பாணியில் தமிழகத்திலும் ஏதேனும் விவகாரம் சிக்குமா என்று சிபிஐ காத்து இருப்பதாக கூறுகிறார்கள்.

அத்தோடு ஏற்கனவே திமுக எம்பிக்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மீது கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அப்படியே நிலுவையில் உள்ளன. அந்த வகையில் அப்படி உள்ள வழக்குகளை தற்போது சிபிஐ அதிகாரிகள் தோண்டி எடுத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சிபிஐ தனது நடவடிக்கையை தொடங்கும் என்கிறாரகள். அதற்கு ஏற்ற வகையில் டெல்லி சென்று திரும்பிய எடப்பாடி பழனிசாமி சில முக்கியமான தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு பாஸ் செய்துவிட்டே திரும்பியுள்ளதாக கூறுகிறார்கள்.

அதன் அடிப்படையில் தான் திமுகவின் கஜானாக்களில் ஒருவர் என்று கூறப்படும் எம்பியை முதலில் சிபிஐ குறிவைத்திருப்பதாக கூறுகிறார்கள். இதே போல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் நேரடியாக மோதி வரும் திமுக வின் மிக முக்கிய எம்பியின் செயல்பாடுகளும் சிறப்பு கண்காணிப்பில் உள்ளதாக சொல்கிறார்கள்.

click me!