வரும் பிப்ரவரி மாதம் பிராக்டிகல் எக்ஸாம்... +2 மாணவர்களுக்கு இணைய வசதி செய்துதர கோரும் ஆசிரியர்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 12, 2020, 1:02 PM IST
Highlights

மேலும் +2 பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் அரசு 1 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை கல்வித்தொலைக்காட்சி உள்ளிட்ட தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்தினாலும் வரும் பிப்ரவரி மாதத்தில் 12 ஆம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வு தொடங்க உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது வரவேற்க தக்கது என்றும், அதேபோல் +2 அரசுப்பள்ளி மாணவர்களின் நலன்கருதி இணைய வசதி செய்துதர வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாக பள்ளி-கல்லூரிகள் மூடபட்டிருந்தது. தற்போது கொரோனா  பெருந்தொற்று தொடர் தடுப்பு நடவடிக்கையின் மூலம் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருவது ஆறுதல் அளிக்கின்றது. பொதுத்தேர்வு நெருங்கும் நெருக்கடியானச் சூழலில் மாணவர்கள் நேரடியாக படிப்பதே சிறந்ததாக அமையும். அதேநேரத்தில், 9,10,11,12 ஆகிய நான்கு வகுப்புகளும் ஒரே நேரத்தில் பள்ளி நுழைவு வாயிலில் நுழைந்தால் தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் கருத்தறிந்தும் உலக சுகாதாரத்துறையின் கொரொனா இரண்டாவது அலை வீசும் என்ற எச்சரிக்கை அறிவிப்பையும் ஏற்று பெற்றோர் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டி பள்ளிகள் திறப்பினை ஒத்திவைத்ததை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது. 

மேலும் +2 பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் அரசு 1 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை கல்வித்தொலைக்காட்சி உள்ளிட்ட தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்தினாலும் வரும் பிப்ரவரி மாதத்தில் 12 ஆம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வு தொடங்க உள்ளது. எதிர்காலத்தில் வாழ்க்கை யினை நிர்ணயம் செய்யும் தேர்வாக அமையவுள்ளதால் ஆசிரியர்-மாணவர் நேரடி தொடர்பிருந்தால் மட்டும்தான் நம்பிக்கையோடு தேர்வினை எதிர்கொள்ளமுடியும். எனவே  அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையறிந்து குறைந்தபட்சம் ஆசிரியர் மாணவர்கள் நேரிடை தொடர்பு ஏற்படுத்த இணையவழிக் கல்விக்கா அரசு+2 மாணவர்களுக்கு மட்டும் டேட்டா ரிசார்ஜ்  செய்துதர ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றோம் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

 

click me!