அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களுக்கு பதவி.. வாரி வழங்கும் மு.க.ஸ்டாலின்..!

By Selva KathirFirst Published Jun 30, 2021, 11:39 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பீட்டர் விரும்பினார். இதற்காக இவர் டெல்லிக்கோ, சத்தியமூர்த்தி பவனுக்கோ செல்லவில்லை. மாறாக அண்ணா அறிவாலயத்தில் தான் தவம் கிடந்தார். காரணம் திமுக மூலம் காங்கிரஸ் சீட் பெற இவர் முயற்சி செய்தார் என்கிறார்கள். ஆனால் அந்த திட்டம் வொர்க் அவுட் ஆகவில்லை. 

கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுகவில் இல்லாமல் வேறு கட்சிகளில் அல்லது வேறு இயக்கங்களில் இருந்து அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களுக்கு தற்போது பதவிகள் தாராளமாக வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக கொள்கை வளர்ச்சிக் குழுவின் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த பதவி கிட்டத்தட்ட ஒரு அமைச்சர் பதவிக்கு இணையானது ஆகும். துறை சார்ந்த அதிகாரிகள் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இந்த பதவியில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு பேச முடியும். மேலும் முதலமைச்சராக இருப்பவர்கள் தான் இந்த குழுவின் தலைவராக இருப்பார்கள். அந்த வகையில் முதலமைச்சரையும் எப்போது வேண்டுமானாலும் சந்தித்து பேசும் உரிமை இந்த பதவிக்கு உண்டு. இத்தகைய உயர் பதவி ஜெயரஞ்சனுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு முதல் காரணம் அவர் பொருளாதார அறிஞர் என்பது மட்டும் அல்ல.

கடந்த சில ஆண்டுகளாக திமுகவிற்கு சாதகமாகும் விஷயங்களை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இவர் விவாதித்து வந்ததும் இந்த பதவி கிடைக்கும் முக்கிய காரணம் என்கிறார்கள். அதோடு மத்திய பாஜக அரசின் பொருளாதார கொள்கைகளில் உள்ள ஓட்டைகளை சுட்டிக்காட்டி இவர் பேசியது திமுகவிற்கு தேர்தல் ஆதாயத்திற்கும் பயன்பட்டது. அந்த வகையில் திமுகவின் ஆதரவாளராக செயல்பட்டதற்கு கிடைத்த பரிசாகவே ஜெயரஞ்சனுக்கு மாநில கொள்கை வளர்ச்சிக்குழுவின் துணைத் தலைவர் பதவி என்று திமுகவினரே பேச ஆரம்பித்துள்ளனர்.

இதே போல் சட்டப்பேரவையில் பல்வேறு குழுக்கள் இருக்கும். அதில் மிக முக்கியமான குழு சட்டப்பேரவை நிகழ்வுகளில் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எங்கெங்கு அமர வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை தீர்மானிக்கும் குழு. இந்த குழுவில் கடந்த அதிமுக ஆட்சியின் போது அதிமுகவை நேரடியாக ஆதரிக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பொதுவான ஊடகத்தினரையும் நியமித்திருந்தார்கள். ஆனால் இந்த முறை இந்த குழுவின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் திமுக ஆதரவு நிலைப்பாடு உடையவர்கள் என்கிறார்கள்.

கடந்த ஐந்து வருடங்களாக தான் பணியாற்றும் ஊடகத்தில் இருந்தபடி அதிமுக, பாஜக அரசை விமர்சித்தவர்களுக்கு சட்டமன்ற குழுவில் இடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதே போல் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்சுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காங்கிரசில் இருந்தவர், பிறகு த.மா.கா சென்றார், பிறகு மறுபடியும் காங்கிரசுக்கு வந்துள்ளார். இவர் எந்த கட்சியில் இருந்தாலும் திமுகவின் குரலாகவே ஒலிக்க கூடியவர். ஊடக விவாதங்களில் காங்கிரசுக்கு ஆதரவாக பேசுவதை காட்டிலும் திமுகவிற்கு ஒன்று என்றால் பீட்டர் கொதியாய் கொதித்துவிடுவார்.

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பீட்டர் விரும்பினார். இதற்காக இவர் டெல்லிக்கோ, சத்தியமூர்த்தி பவனுக்கோ செல்லவில்லை. மாறாக அண்ணா அறிவாலயத்தில் தான் தவம் கிடந்தார். காரணம் திமுக மூலம் காங்கிரஸ் சீட் பெற இவர் முயற்சி செய்தார் என்கிறார்கள். ஆனால் அந்த திட்டம் வொர்க் அவுட் ஆகவில்லை. இதனை அடுத்தே திமுக ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்சுக்கு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக்கியுள்ளனர் என்கிறார்கள். அதாவது இத்தனை காலம் காங்கிரஸ், த.மா.கா என எந்த கட்சியில் இருந்தாலும் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக இருந்ததற்கு பலன் கிடைத்துள்ளது என்கிறார்கள்.

திமுகவிற்காக நேரடியாக உழைக்கும் எத்தனையோ பேர் இருக்கும் நிலையில் காங்கிரசை சேர்ந்தவருக்கு இப்படி ஒரு பதவியை விட்டுக் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்னவோ என்று திமுகவினர் புலம்பல் காதுகளில் கேட்கத்தான் செய்கிறது.

click me!