அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால் கலப்பட விவகாரத்தில் நீரூபணம் செய்யாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யுமாறு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஒரு சில பால் நிறுவனங்கள் தவிர, பெரும்பாலான நிறுவனங்கள் பால் கெட்டுப்போகாமல் இருக்க ஃபார்மால்டிஹைடு என்ற ரசாயனத்தை கலந்து விற்பனை செய்து வருவதாக கூறி வருகிறார்.
மேலும், பாலில் ரசாயன கலப்பு உள்ளது நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலகவும் தயார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
பால் கலப்பட விவகாரத்தில் உண்மையை நிரூபிக்காவிட்டால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் 50 ஆண்டுகளாக கலப்படம் உள்ளது.
தமிழகம் முன்னேற்றம் குறித்து அனைத்து கட்சி இளைஞர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக ஒரு சின்னம் தடை என்று கூற முடியாது.
மக்கள் பிரதிநிதிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் கல்வி தரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.