
தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது, 12 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு யார் காரணம்? யாருடைய அனுமதியின் கீழ் இப்படி ஒரு தாக்குதல் நடைபெற்றது? என பல கேள்விகள் மக்கள் மனதில் இப்போது எழுந்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கவும், இதற்கு காரணமான அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், காங்கிரஸ் எம்.பி. பா.சிதம்பரம் ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அதில் ” தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்த வர்களுக்கு என்னுடைய ஆறுதல் மற்றும் பூரண குணமடைய வாழ்த்து” என தெரிவித்திருக்கும் அவர்
“தூத்துக்குடி பெருந்துயரத்திற்கு யார் காரணம்? 1. சிந்தனையும் செயலும் இழந்த மாநில அரசு. 2. சீரிய தலைமையும் போதிய பயிற்சியும் இல்லாத காவல் துறை” என மத்திய மாநில அரசின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்
மேலும் அவர் மக்களிடம் ”காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக. தமிழ் நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்
இந்த கேள்வியை நியாயப்படுத்தும் விதமாகவே நேற்று பாஜகவை சேர்ந்த எச்.ராஜா, ”துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது சரியே” என கூறி இந்த சம்பவத்தை நியாயப்படுத்த முயன்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.