பிஜேபியின் பினாமியாகத்தான் ரஜினி அரசியலுக்கு வருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.
ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துவிட்டார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்த அவரது ரசிகர்கள், ரஜினியின் அரசியல் அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு அரசியல் கட்சியினரிடையே வரவேற்பும் வாழ்த்துக்களும் விமர்சனங்களும் சம அளவில் உள்ளன.
ஆட்சியாளர்கள்:
ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு வரும் உரிமை அனைவருக்கும் உள்ளது என முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வாசன், தமிழிசை, அழகிரி வரவேற்பு:
ரஜினியின் அரசியல் வருகையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மு.க.அழகிரி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்:
ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் திமுகவுக்கு எந்த சாதக பாதகமும் கிடையாது. அதைப்பற்றி எங்களுக்கு கவலையும் கிடையாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன்:
இவர்களெல்லாம் இப்படி சொல்ல இருவர் மட்டும் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கேஸ்.இளங்கோவன் மற்றும் தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளனர்.
நாஞ்சில் சம்பத்:
காவி அரசியலின் மற்றொரு முகமாகத்தான் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை பார்க்கிறேன். ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் ஒரு மாற்றமும் நிகழாது. தமிழக மக்கள், தினகரனை ஏற்றுக்கொண்டுள்ளனர் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:
கட்சியின் பெயர், சின்னம், கொள்கை என எதையுமே தெரிவிக்காத ரஜினிகாந்த், 234 தொகுதிகளிலும் போட்டி, சிஸ்டத்தை மாற்றுவேன், வாக்குறுதிகளை காப்பாற்றாவிட்டால் பதவி விலகுவேன் என சம்மந்தமில்லாமல் ரஜினி பேசிவருகிறார். பிஜேபியின் பினாமியாகத்தான் ரஜினியின் அரசியல் வருகையை பார்க்கிறேன். பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் எல்லாம் முதல்வராக இருப்பதால் தான் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்ற எண்ணம் நிறைய பேருக்கு வருகிறது. ரஜினியின் அரசியல் எதிர்காலம் சூனியம்தான் என இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.