
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், அவரது உடல் நிலை காரணமாக நீண்ட நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டி உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் கூறி வந்தது.
இந்நிலையில் முதல்வர் உடல்நிலை பற்றி தேவையில்லாத வதந்திகள் வாட்ஸ் அப் , பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. இது குறித்து அதிமுக ஐடி விங்க் சார்பில் பல புகார்கள் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக 43 வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாமக்கல்லை சேர்ந்த சதீஷ்குமார், மதுரையை சேர்ந்த நபர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதே போல் உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் வாக்கு கேட்டு மருத்துவமனையில் இருந்து பேசுவது போல் வாட்ஸ் அப்பில், பேஸ்புக்கில் ஒரு ஆடியோ வாய்ஸ் பரவியது. அதை பற்றிய புகாரின் பேரில் அந்த ஆடியோ வாய்சை பேசி பதிவு செய்து அனுப்பியது யார் என போலீசார் தேடி வருகின்றனர்.