வாக்குகளை வழிபறி செய்துவிட்டது திமுக... அதிமுக - பாமக தோல்விக்கு புதிய காரணம் கூறும் ராமதாஸ்!

By Asianet TamilFirst Published May 26, 2019, 1:41 PM IST
Highlights

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் எந்த வகையிலும் குரல் கொடுக்காத போராட்டம் நடத்தாத திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சாத்தியமே இல்லாத விஷயங்களையெல்லாம் சாதித்துக் கொடுக்கப் போவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசினர். 

பொய்களின் துணையுடனும் பொல்லாங்குகளின் துணையுடன் கட்டமைக்கப்பட்ட மாய வளையத்தில் மக்களைக் கொண்டு வந்து அவர்களின் வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாமகவினருக்கு ராமதாஸ் நீண்ட மடல் எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் உங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மிகவும் நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள், முற்றிலும் மாறாக அமையும்போது ஏமாற்றம் ஏற்படுவது இயல்பானதே.  தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை மட்டும்தான் ஏற்படுத்தினவே தவிர, எனக்குள் எந்தவித கவலையையோ கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள்தான்.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தருமபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை, திண்டுக்கல் ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கியது. இந்தத் தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்பது நமது முதல் இலக்கு. மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பது இரண்டாம் இலக்கு. முதல் இலக்கை நம்மால் எட்ட முடியவில்லை. இரண்டாவது இலக்கு  சாத்தியமாகியிருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர்கின்றன.


இதன்மூலம் தீயவர்களின் கைகளில் நாடும் மாநிலமும் சிக்காமல் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் நமக்கு கிடைத்த வெற்றிதான். பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாமல் போனது பின்னடைவு தானே என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். அது பின்னடைவுதான். ஆனால், அதற்கு காரணங்கள் உள்ளன. 
 தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் எந்த வகையிலும் குரல் கொடுக்காத போராட்டம் நடத்தாத திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சாத்தியமே இல்லாத விஷயங்களையெல்லாம் சாதித்துக் கொடுக்கப் போவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசினர். மதியால் ஏற்றுக்கொள்ள முடியாத அந்த வாக்குறுதிகள் மதுவாக மாறி மக்களை மயக்கின; ஏமாற்றின. பாட்டாளி மக்கள் கட்சி மீதும், அதன் கூட்டணிக் கட்சிகள் மீதும் அடிப்படை ஆதாரமில்லாத அவதூறு குற்றச்சாட்டுகளை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் சுமத்தின.


ஊடகங்களும் உண்மைகளை அறியாமல் பாமகவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு துணை நின்றன. பொய்களின் துணையுடனும், பொல்லாங்குகளின் துணையுடன் கட்டமைக்கப்பட்ட மாய வளையத்தில் மக்களைக் கொண்டு வந்து அவர்களின் வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி. இது தற்காலிகமான வெற்றியே. மக்கள் உண்மையையும், நன்மையையும் உணரும் போது வெற்றி நம் வசமாகும். அதற்கு அதிக காலம் ஆகாது.
நடப்பு மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால், மத்தியில் மீண்டும் அமையவுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசின் துணையுடன், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம். அது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் பெரும் பங்காற்றியிருக்கும். ஆனால், தேசிய அளவில் படுதோல்வி அடைந்து, தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளை செய்ய முடியும் என்று தெரியவில்லை.

 
மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே, தங்களை மற்றும் வளப்படுத்திக் கொண்டு மக்களுக்காக எதையும் செய்யாத திமுக, இப்போது எந்த அதிகாரமும் இல்லாத சூழலில் எதை சாதிக்க முடியும்? அந்த வகையில், அதிமுக - பாமக கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியாகவே அமைந்துள்ளது. 
கடந்த தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்த அளவுக்கு தோல்விகளையும் பரிசாகப் பெற்றுள்ளோம். அப்போதெல்லாம் முடங்கி விடாமல் பாட்டாளிகளாகிய உங்களின் உழைப்பால் மீண்டெழுந்து வந்திருக்கிறோம். இப்போதும் உங்களின் உதவியுடன் அது சாத்தியம் தான். ஆகவே, தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம். பாட்டாளிகளாகிய நீங்கள் வீறு கொண்டு எழுந்தால் இனி வரும் தேர்தல்களில் வெற்றி நமதே. கடந்த காலங்களைப் போலவே மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்.... அவர்களின் கரங்களாலேயே மகுடம் சூடுவோம்! கவலை வேண்டாம்!!”
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!