
குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் வினியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை விவகாரத்தில் முதல்வரின் பெயரால் முறைகேடு நடத்த அனுமதிக்கக்கூடாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல்லில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விரைவில் மகளிர் உரிமை தொகையான மாதம் 1000 ரூபாய் வழங்கப் போகிறோம்.
யாரையும் நாங்கள் ஏமாற்ற போவதில்லை . இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதி கொடுத்தால் , அதை நிச்சயம் நிறைவேற்றுவான். இது தமிழ்நாட்டு தாய்மார்களான என்னுடைய சகோதரிகளுக்கு நன்றாக தெரியும் என்றார். இதைத்தொடர்ந்து இணையத்தில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்டு விண்ணப்பம் ஒன்று வைரலாகி வருகிறது. அத்துடன் விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை. குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை; பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை; விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் விண்ணப்பத்தை வினியோகித்து வருகின்றனர். அதன் பின்னணியில் முறைகேடு செய்யும் நோக்கம் இருக்கலாம். இந்த மோசடிக்கு முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தக்கூடாது; விண்ணப்ப வினியோகத்தை தடுக்க வேண்டும்! குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் வினியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மோசடியாக வினியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.