பஞ்சாப் சென்ற பிரதமருக்கு சில அசௌரியம் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக உயிருக்கு ஆபத்து என்று கூறுவது ஏற்புடையது அல்ல.
பொங்கலுக்கு நகர் புறங்களில் இருந்து. கிராமத்திற்கு வருபவர்களால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. ஆகையால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.
ஜனவரி 5ம் தேதி பஞ்சாப்பில் ஃபெரோஸ்பூரில் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்து எதிர்வரும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். அதற்காக அவர் பதிண்டா விமானத்தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் செல்ல வேண்டியது மேக மூட்டத்தால் ரத்து செய்யப்பட்டது. எனவே சாலை வழியாகச் சென்ற பிரதமர் ஒரு மேம்பாலத்தில் விவசாயிகளின் போராட்டங்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இருபது நிமிடங்கள் பிரதமரின் கார் ஒரு மேம்பாலத்தில் தவித்த நிலையில் அதன்பின் திரும்பிச் சென்றுவிட்டார் பிரதமர். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மீது பாஜக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
இந்நிலையில், சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பஞ்சாப் சென்ற பிரதமருக்கு சில அசௌரியம் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக உயிருக்கு ஆபத்து என்று கூறுவது ஏற்புடையது அல்ல. உலகிலுள்ள அனைத்து சர்வாதிகாரிகளும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று அவ்வப்போது பிரச்சாரம் செய்வது வாடிக்கையான ஒன்றுதான்.
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர். பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். மற்ற மாநிலங்களிலும் எங்களது வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. உத்தராகண்ட், கோவாவில் காங்கிரஸ் வலுவாக உள்ளது.
மேலும், ஊரடங்கை உடனடியாக செயல்படுத்தாமல் படிப்படியாக செயல்படுத்துவது சரியான அணுகுமுறை. பொங்கலுக்கு நகர் புறங்களில் இருந்து. கிராமத்திற்கு வருபவர்களால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கார்த்திக் சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.