இது நடந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறையும்.. தாறுமாறு செய்யும் ப.சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Sep 10, 2021, 4:10 PM IST
Highlights

70 ஆண்டுகளாகக் காங்கிரஸ் ஒன்றுமே செய்யாதது போலவும், 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மோடி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றியதால் தான் இந்தியாவுக்கே சுதந்திரம் கிடைத்தது போன்ற கற்பனையிலும் உள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லா வகையிலும் மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் தந்து கொண்டிருக்கிறார் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பில்லை. ஆட்சி மாறினால் வேண்டுமானால் குறைய வாய்ப்பு இருக்கிறது. கொடநாடு மறு விசாரணை வழக்கில் உள்ளது. அதை பற்றி நான் என்ன கருத்து கூறுவது. கொடநாடு சம்பவத்தை பற்றி விசாரித்து யார் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடித்து சட்டப்படி உரிய தண்டனையை வழங்க வேண்டும். நடந்தது குற்றம். குற்றம் நடக்கவில்லை என்று யாரும் சொல்ல முடியாது என்றார். 

இந்திய பாதுகாப்புக்கு இலங்கை அச்சுறுத்தலாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்தியாவின் செல்வாக்கு பகுதியான இந்து மகா சமுத்திர பகுதி கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்த 7 ஆண்டுகளாகச் சிதைந்து வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு தான் காரணம். பழைய வரலாற்றைப் படிக்காமல், வெளிநாட்டுக் கொள்கையை வகுத்துக்கொண்டு செயல்படுவதால் தான் நம்முடைய செல்வாக்கு குறைந்து வருகிறது. நேபால், வங்கதேசம், இலங்கை, மாலத் தீவு ஆகிய பகுதிகளில் நமது செல்வாக்கு குறைந்து வருவதற்கு சரியான வெளிநாட்டுக் கொள்கை இல்லை என்பதுதான் காரணம்.

மேலும், பொதுத் துறை நிறுவனங்களை, மொத்த வியாபாரமாக விற்பனை செய்கிறது ஒன்றிய அரசு. 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று மோடி கேட்கிறார். 70 ஆண்டுகளாகக் காங்கிரஸ் ஒன்றுமே செய்யாதது போலவும், 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மோடி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றியதால் தான் இந்தியாவுக்கே சுதந்திரம் கிடைத்தது போன்ற கற்பனையிலும் உள்ளனர்.

காங்கிரஸ் 70 ஆண்டுகளாக என்ன செய்தது என ஊடகங்கள் சரியாக விளம்பரப்படுத்துவது கிடையாது. ஆகையால் பிரதமர் மோடியே 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது எனப் பட்டியலே போட்டிருக்கிறார். எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் ரயில்வே பாதை, துறைமுகங்கள், விமான தளங்கள் என அனைத்தையும் அவரே பட்டியல் போட்டு வெளியிட்டிருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இனிமேல் காங்கிரஸ் என்ன செய்தது எனக் கேட்டால், அவர் கையெழுத்திட்டுள்ள இந்த பட்டியலையே படித்துக் காண்பிக்கலாம். காங்கிரஸ் மற்றுமில்லை மற்ற பிரதமர்களும் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார்கள்.ஆகவே 70 ஆண்டு பொதுத் துறை சொத்துகளை, நிறுவனங்களைத் தீபாவளி காலங்களில் நடைபெறும் கிராண்ட் சேல் என்பது போல், இவர்கள் ’கிராண்ட் க்ளோசிங் சேல்’ ஆக மூடு விழா நடத்த முயல்கிறார்கள். தவறான செயலை மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்? என்று தெரியவில்லை என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

click me!