மணியம்மையை பெரியார் திருமணம் செய்தது தப்பு... பட்டென போட்டுடைத்த அன்பழகனின் ஃப்ளாஷ்பேக்..!

By Thiraviaraj RMFirst Published Mar 7, 2020, 12:58 PM IST
Highlights

அவர் என்னைவிட வயதில் சிறியவர்தான்; ஆனால் கட்சித் தலைவருக்கு உரியபடி அவரால் இருக்கமுடிகிறது. அதனால் அவரை தி.மு.கவின் தலைவராக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை

தேர்தலில் வென்று மக்கள் பிரதிநிதியாகி கட்சியிலும் ஆட்சியிலும் பதவியைப் பிடிப்பதே அரசியல் என்பவர்களுக்கு மத்தியில், அதோடு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு கொள்கைக்கார தி.மு.க.காரராக 97 வயது வரை இயங்கி வந்தவர், க.அன்பழகன். முன்னாள் அமைச்சர் என்பதைவிட தி.மு.கவின் பொதுச்செயலாளர் என்பதே இவரின் முக்கிய அடையாளம்.  

தி.மு.கவின் தலைவர் கருணாநிதி இவருக்கு இளையவர் என்றாலும் கட்சித் தலைவராக கருணாநிதியை ஏற்றுக்கொண்டு செயல்பட்டுவருவது அன்பழகனின் கட்டுப்பாட்டு உணர்வு. அதைப்போலவே கருணாநிதியும் கட்சியின் பொதுச்செயலாளரும் தன்னைவிட மூத்தவரான அன்பழகனுக்கு கொடுக்கும் மரியாதையை என்றும் விட்டுவைத்ததில்லை.  

கருணாநிதியின் உடல்நிலை நலிவடைவதற்கு முன்புவரை, அன்பழகனின் பெரும்பாலான பிறந்தநாள்களுக்கு கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் தோட்டப் பகுதியில் இருக்கும் அவரின் வீட்டுக்குப் போய் வாழ்த்துக்கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார், கருணாநிதி. தி.மு.கவில் இருந்த பழைய கொள்கைக்காரத் தலைமுறையின் அடையாளமாக இருந்த அன்பழகன், 44 புத்தகங்களை எழுதியிருக்கிறார். 1943-ல் இவர் எழுதிய ‘வாழ்க திராவிடம்’, 1947-ல் எழுதிய ’வாழ்க கிளர்ச்சி’, 1953-ல் எழுதிய ’தொண்டா, துவேசமா?’ஆகிய நூல்கள், மறுபதிப்பாக வெளியிடப்பட்டன.

தி.மு.கவின் தோற்றத்தின்போதே அந்தக் கட்சியின் தமிழகம் முழுவதுமிருந்த குறைந்தது 50 தலைவர்களாவது எழுத்தாளர்களாகவும் இருந்தனர். பெரும்பாலானவர்கள் தனியாக அந்தந்த வட்டாரத்திலும் அதைத்தாண்டியும் வாசகர் வட்டத்தைப் பெற்றிருந்தார்கள். எழுத்தையும் பேச்சையும் அரசியல் கருவியாகக் கொண்டிருந்தார்கள் என்பதன் நிதர்சன வெளிப்பாடு இது! அவர்களில் ஒருவராகவும் முன்னிலையிலும் இடம்பெற்றவர், க.அன்பழகன். 

தமிழ் குறித்தும் தமிழர் இனம் பற்றியும் செறிவான கருத்துகளைக்கொண்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். சீதையின் காதல், ஜாதி முறை, தமிழரும் திருமணமுறையும், கலையும் வாழ்வும் ஆகியவை அன்பழகனின் குறிப்பிடத்தக்க புத்தகங்கள் என்றாலும், ’வகுப்புரிமைப் போராட்டம்’எனும் நூல் இவருடைய ’மாஸ்டர் பீஸ்’என்கிறார் முனைவர் மங்கள முருகேசன். 

”இந்த வயதிலும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்துவிடுவார், அன்பழகன். வீட்டுக்கு உள்ளேயே  நடைபோட்டுவிட்டு, சில எளிய உடற்பயிற்சிகளையும் செய்வார். உடற்பயிற்சி ஆலோசகர்களும் அவ்வப்போது வந்து உதவினார்கள். குளியல் எல்லாம் முடிந்தபின்னர் அன்றாடம் வந்துள்ள நாளேடுகளை முழுவதுமாகப் படித்துவிடுவார். அவருக்கு ஆர்வமான தமிழ், சைவம் போன்றவை தொடர்பான செய்திகளைக் குறியிட்டு எடுத்துவைப்பார். ஆற்காடு வீராசாமி போல அடிக்கடி தன்னைச் சந்திப்பவர்களிடம் பேசிக்கொண்டு இருப்பார்.

இதைத்தாண்டி அவருடைய வாசிப்பு உலகம் தனியானது. அலமாரியில் எந்த புத்தகம், எங்கே இருக்கிறது என்பது அவருக்கு பக்காவாகத் தெரியும். கொஞ்சம் தளர்வடைவதற்கு முன்னர்வரை புத்தகங்களை அடுக்கிவைப்பது, அட்டைபோடுவது என அவற்றை ஒழுங்குபடுத்துவதில் அதிக கவனமாக இருப்பார்” என்கிறார்கள் அன்றாடம் அன்பழகனை நெருக்கமாகக் கவனித்து வருபவர்கள்.

 

பெரும்பாலான தலைவர்களுக்கு இல்லாத சில பழக்கங்கள், அன்பழகனின் தனித்தன்மை. சந்திக்கவரும் யாரையும் வேறுபாடு கருதாது கைகுலுக்கி வரவேற்பது, அவரின் இயல்பு. எந்த ஒன்றையும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகப் பேசுவதும் அன்பழகனின் நெடுங்கால குணம். பரிந்துரைக்காக வருவோர் வருத்தப்படுவார்களே என்றெல்லாம் யோசிக்காமல், அவர்களின் கோரிக்கை நடக்கும், நடக்காது என அந்த இடத்திலேயே யதார்த்தத்தைச் சொல்லிவிடுவார். 

இரண்டு சம்பவங்களை அவரின் இந்த குணத்துக்கு உதாரணமாகச் சொல்வார்கள். ஒன்று, திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க பிரிந்தபோது, பலரும் சமாளித்துக்கொண்டு இருந்தபோது, “ஆமாம்; அய்யாவைவிட்டுப் பிரியும்போது எங்களுக்கு காரணம் தேவைப்பட்டது; அது மணியம்மையாருடனான திருமணமாக அமைந்துவிட்டது” என பட்டெனச் சொல்லியிருக்கிறார். மற்றது, தி.மு.கவில் மூத்தவராக இருந்தபோதும் இளையவரான கருணாநிதியின் தலைமையை ஏற்றுக்கொண்டதைப் பற்றிக் கேட்டதற்கு,”அவர் என்னைவிட வயதில் சிறியவர்தான்; ஆனால் கட்சித் தலைவருக்கு உரியபடி அவரால் இருக்கமுடிகிறது. அதனால் அவரை தி.மு.கவின் தலைவராக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என சர்வசாதாரணமாகச் சொன்னது! 

click me!