பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்து போனி ஆகாமல் போயுள்ளனர்; தம்பி விஜய் நல்லவர் - செல்லூர் ராஜூ

By Velmurugan sFirst Published Feb 3, 2024, 4:16 PM IST
Highlights

எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்து போனியாகவில்லை, தம்பி விஜய் தற்போது கட்சி ஆரம்பித்துள்ளார் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட கலையரங்கத்தை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சர்ருமான செல்லூர் ராஜு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, மதுரை மாநகரில் என்னுடைய காலத்தில் மதுரை மாநகராட்சியில் மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிருள்ளவரை மதுரை மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்.

மதுரையில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி என இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரைக்கு ஒன்றுமே செய்யவில்லை. தற்போது மதுரையில் நடைபெற்று வரும் பாலம், கட்டிட வேலைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் என அனைத்திற்கும் வித்திட்டது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய அதிமுகவும் தான்.

பகலில் போலீஸ் வேலை, இரவில் செயின் பறிப்பு; பொள்ளாச்சியில் தலைமை காவலர் அதிரடி கைது

உலகத்தில் ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல ஒரு எம்ஜிஆர் தான். சினிமாவில் இருந்து கட்சி ஆரம்பித்து இந்தியாவில் 31 ஆண்டு காலம் ஆட்சி அமைத்தது அதிமுக மட்டும் தான். சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருக்கலாம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திமுகவில், காங்கிரஸில் பணியாற்றியவர். ஒரு கட்டத்தில் கட்சி ஆரம்பித்தார். அந்த கட்சி போனி ஆகிவிட்டது. நடிகர் டி ராஜேந்தர் கட்சி ஆரம்பித்தார் போனியாகிவிட்டார். 

அதனைத் தொடர்ந்து நான் தான் எம்ஜிஆரின் வாரிசு என்று பாக்யராஜ் கட்சி ஆரம்பித்து ஒன்றுமில்லாமல் போனார். விஷால் கட்சி ஆரம்பித்தார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கூறி பின்பு பின் வாங்கினார் தற்போது தம்பி விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். விஜய் நல்ல மனம் படைத்தவர். இளைஞராக இருக்கிறார். நான் எப்போதும் அவரை வரவேற்று தான் பேசி இருந்தேன். விஜய்யின் கட்சியை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

யார் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் உறுதியாக முதலமைச்சராக வருவார். தற்போது உள்ள திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். திமுக ஆட்சியை அப்புறப்படுத்த நாடாளுமன்றத் தேர்தல் முன்னோடியாக அமையும். கூட்டணியை பற்றி நாங்கள் எப்போதும் கவலைப்படுவதில்லை. எங்களுக்கு தொண்டர்கள் பலம் உள்ளது. கூட்டணி இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். கூட்டணி வந்தால் நாங்கள் தான் அழைத்துச் செல்வோம்.

அரசியல் கட்சி தொடங்கிய விஜய்; பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், ஆடு இலவசமாக வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜயின் கட்சி மக்கள் கையில் உள்ளது. கொள்கைகள் சொல்ல வேண்டும். கமலஹாசன் தனது வாயை வாடகைக்கு விட்டு விட்டார். மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன. மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சொன்னார். அதற்காக கட்சி ஆரம்பித்தார். தற்போது ஒரு தொகுதிக்காக தனது வாயை வாடகைக்கு விட்டு விட்டார். தம்பி விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். 

அதிமுக வேறு மற்ற கட்சிகள் வேறு. தம்பி விஜய் கட்சி ஆரம்பித்தது எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும். மக்கள்தான் எஜமானர்கள். மதுரைக்காரர்கள் வெள்ளந்தியான மனசுக்காரர்கள். யார் நல்லது செய்தாலும் பாராட்டுவோம். முதல்வர் ஏற்கனவே துபாய் சென்றார். லூலு மால் வருகிறது என்றார். உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழ்நாட்டில் தான் முதலமைச்சர் நடத்தினார். மக்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை.

விஜய் ரசிகர்கள் திமுகவில் அதிகம் இருந்துள்ளனர். தற்போது உள்ள ரசிகர்கள் போய்விடுவார்கள். திமுகவின் கூடாரம் காலி ஆகி விடும் என திமுகவினர் பயப்படுகின்றனர் என்றார்.

click me!