எங்கள் நிபந்தனைகளை ஏற்றால் பாஜகவுடனான கூட்டணி குறித்து யோசிப்போம்... பாரிவேந்தர் அதிரடி!!

By sathish kFirst Published Feb 5, 2019, 9:23 PM IST
Highlights

நாங்கள் கேட்கிற தொகுதிகளை, கேட்கிற எண்ணிக்கையில் கொடுத்தால் பாஜகவுடனான கூட்டணி குறித்து யோசிப்போம்” என்று இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் இன்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும், கூட்டணி குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. அப்போது, யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் கூட்டணி தொடர்பாக பாரிவேந்தர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், “நாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில், எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும். மேலும் கடந்த காலங்களில் எங்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதையோடு எங்களை நடத்தினால் பிஜேபி வுடனான கூட்டணி குறித்து யோசிப்போம். இல்லையெனில் உறுதியாக இருக்கிறோம். பார்த்துக்கொள்வோம்” என்று தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் பிஜேபி கூட்டணியில் அங்கம் வகித்த பாரிவேந்தர், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை தனது மகன் ரவிக்கு கள்ளக்குறிச்சி தொகுதியை தயார் செய்துவருகிறாராம் பாரிவேந்தர். இதற்காக திமுகவோடு கூட பேசிவருவதாக கூறுகிறார்கள் இந்திய ஜனநாயக கட்சியினர்.    

click me!