ரூட்டை மாற்றிய பாமக.. ஐஐடிக்கு எதிராக திரும்பிய கோபம்.. களத்தில் இறங்கிய அன்புமணி படை.

By Ezhilarasan BabuFirst Published Nov 23, 2021, 2:07 PM IST
Highlights

இதே தவறு மீண்டும் நடந்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம். தமிழ் மொழி குறித்து கொள்கை வைத்துள்ள திமுக அரசு இதனை முதலில் கண்டிக்க வேண்டும். 

சென்னை ஐஐடியில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், அதேநேரத்தில் சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள பாமக, இன்று ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. தமிழகம் முழுவதும் ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டுமென பாமகவினர் பல்வேறு வகையில் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் இன்று ஐஐடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது  பேசுபொருளாக மாறியுள்ளது.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்.. சாதி, மதம், மொழி, இனம் கடந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இப்படத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அப்படத்தில் வரும் வில்லனுக்கு குருவின் பெயர் வைக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும் பாமகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். திட்டமிட்டு வன்னியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் அப்படத்தில் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.  மேலும், சூர்யா ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் பாமக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாமக மாவட்ட செயலாளர் ஒருவர், சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு என அறிவித்தது சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில் பாமகவினர் அடர்த்தியாக உள்ள மாவட்டங்களில் நடிகர்  சூர்யாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் வெளியில் நடமாட முடியாது என்றும் பகிரங்கமாக எச்சரித்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் சூர்யா தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். இதனால் சூர்யாவுக்கு எதிராக பாமகவினரின் நடவடிக்கைகள் உக்கிரமடைந்துள்ளது. அதே நேரத்தில் பாமகவுக்கு அரசியல் செய்ய காரணம் இல்லாததால்தான் சூர்யாவை வைத்து உள்நோக்கத்துடன் பாமக விளம்பரம் அரசியல் செய்து கொண்டிருக்கிறது என்ற விமர்சனமும் அக்கட்சிக்கு எதிராக எழுந்துள்ளது. சமூக அக்கறையுள்ள ஒரு திரைக் கலைஞரை அடிப்போம், தாக்குவோம் என்று பேசுவது மோசமான வன்முறையை தூண்டும் செயல் என்றும் இந்த மிரட்டல் அரசியலை தயவுசெய்து பாமகவினர் கைவிடவேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கிறது.

இந்த கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் பாமக மாணவர் அணியினர் இன்று காலை சென்னை ஐஐடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். பாமகவுக்கு அரசியல் செய்ய வேறு காரணங்களே இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த போராட்டம் நடந்துள்ளது. அதாவது, சென்னை ஐஐடியில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மாற்றாக சமஸ்கிருத மொழியில் இறைவணக்கம் பாடியதாகவும், தொடர்ந்து ஐஐடி நிர்வாகம் தமிழ்தாய் வாழ்த்தை புறக்கணித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர்  கண்டனம் தெரிவித்தனர். அந்த வரிசையில் பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து குரல் எழுப்பினார். 

சென்னை ஐஐடியில்  நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுகிறது, மாறாக சமஸ்கிருதத்தில் இறைவனுக்கம் பாடப்படுகிறது. இது தமிழ் தாயை அவமதிக்கும் செயலாகும், இது கண்டிக்கத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஐஐடியில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது, அப்போது அதை கடுமையாக கண்டித்தேன், அதைத் தொடர்ந்து ஐஐடி நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது. 2019ஆம் ஆண்டு ஐஐடி வைர விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து  பாடப்படாது என அறிவிக்கப்பட்டது. பின்னர் நான் எச்சரித்ததை அடுத்து அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது என தடது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். மேலும், தமிழக அரசு ஐஐடி நிர்வாகத்திடம் பேசி அனைத்து விழாக்களிலும் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 

இந்நிலையில் ஐஐடி நிர்வாகத்திடம் இருந்து எந்தவிதமான பதிலோ, விளக்கமோ வரவில்லை. இதனால் இன்று காலை ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து பாமக மாநில மாணவர் சங்கத்தினர் அதன் செயலாளர் ஸ்ரீராம் ஐயர் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் அன்புமணி படை எனப்படும் பாட்டாளி மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாமக மாநில மாணவர் சங்க செயலாளர் ஸ்ரீராம், தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் இதுவரை நடைபெறாத அநீதி ஐஐடியில் நடைபெற்றுவருகிறது. தமிழ் தாய் வாழ்த்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதை பலமுறை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கையாக எச்சரித்தும், தொடர்ந்து ஐஐடி நிர்வாகம் தமிழை புறக்கணித்து வருகிறது. எனவே இதை கண்டித்து இன்று போராட்டம் நடத்தியுள்ளோம்.

இதே தவறு மீண்டும் நடந்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம். தமிழ் மொழி குறித்து கொள்கை வைத்துள்ள திமுக அரசு இதனை முதலில் கண்டிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை, உடனே தமிழக அரசு ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து அறிக்கை வெளியிட வேண்டும். தமிழக மக்களுக்கும் மொழிக்கும் ஆபத்து நேர்ந்தால் பாமக முதல் குரல் கொடுக்கும் இவ்வாறு அவர் கூறியுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் எந்த விஷயத்திலும் பாமக தலையிடவில்லை, குறிப்பாக வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் பாமகவினர் களத்திற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு பாமகவின் மீது இருந்து வருகிறது. அதேபோல் நடிகர்களை மிரட்டி அரசியல் செய்வதே பாமகவின் வாடிக்கையாக உள்ளது என்றும், அரசியல் செய்ய பாமகவிற்கு விஷயமில்லாததால் இப்படி நடந்து கொள்வதாக குறைகூறி வந்த நிலையில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்புக்கு எதிராக பாமக முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!