முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் கூவத்தூர் பழனிசாமி.. சசிகலாவின் காலில் விழுந்தவங்க தானே நீங்கலாம்..? தெறிக்கவிட்ட தினகரன்

First Published Jan 9, 2018, 3:48 PM IST
Highlights
palanisamy is not the qualified person for CM post said dinakaran


முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் கூவத்தூர் பழனிசாமி என சுயேட்சை எம்.எல்.ஏ தினகரன் விமர்சித்துள்ளார்.

சட்டமன்றத்தில், 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் தொடர்பாக பேச வாய்ப்பு வழங்கப்படாததால் வெளிநடப்பு செய்த தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, எதிர்க்கட்சியான திமுக அமர்ந்திருக்கும் பகுதியில் எனக்கு சீட் ஒதுக்கினர். அதனால் அங்கு உட்கார்ந்திருந்த என்னிடம் திமுக உறுப்பினர்கள் பேசினர். நானும் அவர்களிடம் பேசினேன். திமுக எதிர்க்கட்சி தானே தவிர எதிரிக்கட்சி அல்ல. திமுக உறுப்பினர்களுடன் பேசக்கூடாதா என்ன? 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் தொடர்பாக பேச முனைந்தேன். ஆனால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. திமுக உறுப்பினர் அன்பழகன், எனக்கு பேச வாய்ப்பு அளிக்கும்படி கூறினார். உடனே திமுகவிற்கும் எனக்கும் தொடர்பு என கூறுகிறார்கள். நான் எம்பியாக இருக்கும்போதே நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களின் அருகில்தான் அமர்ந்திருப்பேன். அப்போதும் அனைவரிடமும் பேசுவேன். இவ்வாறு பேசுவதை எல்லாம் ஜெயலலிதாவே பெரிதுபடுத்த மாட்டார்.

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மக்களை பற்றியெல்லாம் கவலையில்லை. தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கி மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றனர். போக்குவரத்து ஊழியர்கள் 2.57 மடங்கு ஊதிய உயர்வு கோருகின்றனர். 2.44 மடங்கு வழங்குவதாக அரசு கூறுகிறது. 0.13 மடங்கு கூடுதலாக வழங்குவதில் அரசுக்கு என்ன பிரச்னை? அதை வழங்குவதற்குக் கூட முதல்வராக இருப்பவருக்கு மனமில்லை. முதல்வர் பதவியில் இருந்தும் அந்த பதவிக்கான தகுதியோடு பெருந்தன்மையோடு நடந்துகொள்ள தெரியவில்லை. முதல்வர் பதவிக்கு தகுதியே இல்லாதவர் கூவத்தூர் பழனிசாமி. 

ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சசிகலாவின் காலில் விழுந்தவர்கள் தானே இவர்கள். பதவியை காப்பதில் மட்டுமே அவர்களின் கவனம் உள்ளது என்பதை அவர்களது நடவடிக்கைகளின் தொனியே காட்டுகிறது என தினகரன் விமர்சித்து பேசினார்.
 

click me!