இன்னும் 30 நாட்களில் பழனிசாமி ஆட்சி கவிழும் என முன்னாள் அமைச்சரும் தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் மாவட்டந்தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அரசுக்குப் போட்டியாக தினகரன் அணி சார்பிலும் மாவட்ட வாரியாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.
கரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தினகரன் ஆதரவாளர்களுடன் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, இன்னும் 30 நாட்களில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தமிழகத்தில் கவிழும். அது எப்படி என்பதைப் பாெறுத்திருந்துப் பாருங்கள். ஜெயலலிதா பிறந்தநாள் முன்னதாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். ஜெயலலிதா கனவை சிதைத்து, அதிமுகவை சிதைத்த அவர் அதன்பிறகு சிறைக்குச் செல்வார்.
மக்களை அல்லல்படுத்தும் விதமாக திடீரென பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. உடனடியாக பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
தினகரனின் ஆதரவாளரான, செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆனால் தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.