பழனிசாமியும் பன்னீர்செல்வமும் துரோகிகள் அல்ல.. தியாகிகள்!! ஊட்டி குளிரில் சூட்டை கிளப்பிய அமைச்சர் வேலுமணி..!

First Published Dec 30, 2017, 12:47 PM IST
Highlights
palanisamy and panneerselvam are martyrs said minister velumani


பழனிசாமியும் பன்னீர்செல்வமும் துரோகிகள் அல்ல; அவர்கள் தியாகிகள் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் குழப்பங்களும் குளறுபடிகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பல்வேறு அதிரடி மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, தர்மயுத்தம் நடத்தி சசிகலாவையும் தினகரனையும் கட்சியை விட்டு ஓரங்கட்டிவிட்டு பழனிசாமியுடன் இணைந்தார் பன்னீர்செல்வம்.

பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்து இரட்டை இலையை மீட்டெடுத்து தினகரனை தனித்துவிட்டனர். ஆனாலும் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்று இரட்டை இலையையும் கட்சியையும் மீட்பேன் என சவால் விடுத்த தினகரன், ஆர்.கே.நகரில் அதிமுகவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

தினகரனின் வெற்றியை அடுத்து சில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் தினகரனுடன் தொடர்புகொண்டதாகவும், தினகரன் பக்கம் தாவ வாய்ப்புள்ளதாகவும் வெளியான தகவலை அடுத்து தினகரனின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து களையெடுக்கும் பணியை முதல்வர் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் மேற்கொண்டு வருகின்றனர்.

தினகரன் மற்றும் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் பரஸ்பரம் துரோகிகள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். துரோகத்தை உணர்ந்து துரோகிகள் திருந்த வேண்டும் என தினகரன் எச்சரிக்கிறார். அதே நேரத்தில் தினகரன் தான் துரோகி என பழனிசாமி தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர். இப்படியாக அதிமுகவுக்குள் பனிப்போர் நீடித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்துகின்றனர். கட்சியின் தொண்டராக இருந்து செயல்படும் இவர்கள் இருவரும் துரோகிகள் அல்ல. தியாகிகள். இவர்களை துரோகிகள் என சொல்பவர்கள்தான் துரோகிகள். பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கட்சியில் அடிமட்ட நிலையிலிருந்து படிப்படியாக வளர்ந்து ஜெயலலிதாவால் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டவர்கள். ஆனால் தினகரனோ பத்தாண்டுகளாக கட்சியிலேயே இல்லாதவர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர். பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்கள் துரோகிகள் அல்ல. தியாகிகள் என பேசினார்.
 

click me!