சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க உத்தரவு.. அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு.

By Ezhilarasan BabuFirst Published Mar 10, 2021, 12:02 PM IST
Highlights

கடந்த இரண்டு மாத காலத்தில் வழக்கத்திற்கு மாறாகவும் சந்தேகத்திற்கிடமான வகையிலும் ஏதேனும் வங்கி கணக்கில் இருந்தோ, அல்லது வேட்பாளர் வங்கி கணக்கில் இருந்தோ அல்லது அவர்கள் சார்ந்த, அவர்களது வங்கி கணக்கில் இருந்தோ அல்லது அரசியல் கட்சியின் வங்கி கணக்கில் இருந்தோ ஒரு லட்சத்திற்கும் மேல் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டால், அதை உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். 

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் செயல்படுத்துவது குறித்தும், வங்கி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம்: 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், துணை ஆணையாளர், வருவாய் மற்றும் நிதி திரு ஜே. மேகநாதன் ரெட்டி அவர்கள் தலைமையில் வங்கி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்வதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கும் ஏஜென்சிகள், நிறுவனங்களின் வேன்கள் அங்கீகாரம் இல்லாத ஏஜென்சியின் மூன்றாம் நபரின் பணத்தையோ, தனிநபரின் பணத் தொகையையோ எடுத்துச் செல்லாமல் இருக்க வேண்டும். 

தேர்தல் நேரத்தில் தேர்தல் கமிஷனின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி  அல்லது இதர அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள், ஏஜென்சி நிறுவனத்தின் ரொக்கம் கொண்டு செல்லும வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய நேரிடும். அதற்காகவே இந்த நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து வழக்கத்திற்கு மாறாக அல்லது சந்தேகிக்கும் படி இரண்டு மாதங்களில் 10 லட்சத்திற்கும் மேல் பணப்பரிவர்த்தனை செய்பவர்களின் பெயர் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் வருமான வரித் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க சென்னையில் உள்ள வருமான வரித்துறை தலைவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் சந்தேகத்திற்கு இடமான பண பரிவர்த்தனைகள், நகை ஆபரணங்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் தொடர்பான தகவல்களை1800-425-6669  என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 044- 28271915  என்ற பேக்ஸ் எண்ணிலும் itcontrol.chn@gov.in  என்ற மின்னஞ்சல்  முகவரியிலும், 9445394453  என்ற வாட்ஸ் அப் என்னிலும் தெரிவிக்கலாம்.

முகவர்கள் நிறுவனங்கள் ஆகியவை வங்கிகளிலிருந்து பணம் எடுத்துச் செல்லும் போது, அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வைக்க வாகனங்களில் செல்லும் போதோ அல்லது ஒரு கிளையில் இருந்து வேறு கிளைக்கு பணம் வாகனங்களில் எடுத்துச் செல்லும் போது வாகனங்களில் இருப்பவர்கள் அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். பல நபர்களுக்கு RTGS சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு சேமிப்புக் கணக்கிலிருந்து, பணபரிமாற்றம் நடைபெற்றால் அது தொடர்பான விவரங்களை  மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். 

கடந்த இரண்டு மாத காலத்தில் வழக்கத்திற்கு மாறாகவும் சந்தேகத்திற்கிடமான வகையிலும் ஏதேனும் வங்கி கணக்கில் இருந்தோ, அல்லது வேட்பாளர் வங்கி கணக்கில் இருந்தோ அல்லது அவர்கள் சார்ந்த, அவர்களது வங்கி கணக்கில் இருந்தோ அல்லது அரசியல் கட்சியின் வங்கி கணக்கில் இருந்தோ ஒரு லட்சத்திற்கும் மேல் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டால், அதை உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தின் முன்னோடி வங்கி அலுவலர், நாள்தோறும் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் தினசரிப்  பணப்பரிவர்த்தனை விவரங்களைப் பெற்று தேர்தல் செலவு கண்காணிப்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!