துணை முதலமைச்சர் பதவியில் இருந்து ஓபிஎஸ் விரைவில் கழற்றிவிடப்படுவார் என்றும், இதற்கான சிக்னலை பாஜக மேலிடம் வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓபிஎஸ் –டி.டிவி.தினகரன் ரகசிய சந்திப்பு பிரதமரை கோபமடையச் செய்துள்ளதால் இந்த நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் துணை முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்தே இபிஎஸ்க்கும் அவருக்கும் இடையே ஏழாம் பொருத்தம்தான். தனது ஆதரவாளர்களுக்கு பாண்டியராஜனைத் தவிர வேறு யாருக்கும் அவரால் பதவி வாங்கித் தர முடியவில்லை.
இது மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்த அதே நேரத்தில், ஓபிஎஸ்ன் ஆதவாளர்கள், அவர் மட்டும் நல்ல துறைகளை வாங்கி வைத்துக் கொண்டார் மற்றவர்களை கைவிட்டுவிட்டாரே என புலம்பிக் கொண்டிருந்தனர். இப்போது அவரது ஆதரவாளர்களுக்கே தெரியாமல் தினகரனை சந்தித்து வந்திருப்பது அவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அவரது ஆதரவாளர்கள் கூட கொஞ்சம், கொஞ்சமாக இபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர். கிட்டத்தட்ட தற்போது ஓபிஎஸ் தனியாக விடப்பட்டுள்ளார். டெல்லியில் முன்பு தனக்கு இருந்த செல்வாக்கும் தற்போது இல்லை என்ற நிலைமைதான் தற்போது உள்ளது.
இனி பன்னீர் செல்வத்தின் தயவு தேவையில்லை என்றே எடப்பாடி தரப்பும் நினைக்கிறது. நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்துவிட்டு வந்த இபிஎஸ், சற்று தெம்புடன் காணப்படுகிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கு தீர்ப்பு வரும் வரை ஓபிஎஸ் பதவியில் நீடிப்பார் என்றும் பின்னர் அவரை தூக்கும் படலம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.