தேனியில் ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த ஓ.பி.எஸ்... கட்சிதமாக துரிதப்படுத்திய எடப்பாடியார்..!

By Thiraviaraj RMFirst Published Dec 10, 2020, 3:10 PM IST
Highlights

கட்டுமான பணிகள் முடியும் வரை தாற்காலிகமாக பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே உள்ள தனியார் கட்டடத்தில் வகுப்புகள் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் தேனி மாவட்டம், தேனி வட்டம், வீரபாண்டி கிராமத்தில் 265 கோடியே 87 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

முதல்வர் கடந்த 20.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, தேனி மாவட்டம், தேனி வட்டம், வீரபாண்டி கிராமத்தில் 253.64 ஏக்கர் நிலப்பரப்பில் 265 கோடியே 87 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு முதல்மைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

புதிதாக அமையவுள்ள இக்கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கான மருத்துவ சேவையை பூர்த்தி செய்யும். இந்தக்கல்லூரி கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால், பால், இறைச்சி மற்றும் கால்நடை உற்பத்திப் பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கும் பெரும் வாய்ப்பாக அமையும்.

2020–-21–ம் கல்வியாண்டில் இக்கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 40 மாணாக்கர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இந்த புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நன்கு வடிவமைக்கப்பட்ட நிர்வாகக் கட்டடம், நவீன வகுப்பறைகளுடன் கூடிய 8 கல்வித் தொகுதி கட்டடங்கள், மாணவர்கள் மற்றும் மாணவியருக்கான தனித்தனி விடுதிகள், உணவகம், கல்லூரி முதல்வருக்கான குடியிருப்பு, விடுதிக் கண்காணிப்பாளருக்கான குடியிருப்பு, விருந்தினர் இல்லம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டமைக்கப்பட உள்ளது. 

அத்துடன் இந்தக்கல்லூரியில், நவீன ஆய்வக வசதிகளுடன் கூடிய பால் மற்றும் இறைச்சிகளை பதப்படுத்தும் தொழில்நுட்ப நிலையங்கள் உட்பட 15 துறைகள், கால்நடை உற்பத்தி தொழில் நுட்பங்களை விவரிப்பதற்காக கால்நடைப் பண்ணை வளாகம், கால்நடை சிகிச்சை சார்ந்த பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய கால்நடை மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவமனை வளாகம் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கட்டுமான பணிகள் முடியும் வரை தாற்காலிகமாக பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே உள்ள தனியார் கட்டடத்தில் வகுப்புகள் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  ஆக மொத்தத்தில் ஓ.பி.எஸ் போட்டுக்கொடுத்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார் இ.பி.எஸ்.!

click me!