
ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்திலேயே இரண்டு முறை முதல்வராக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம்தான் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உண்மையான போட்டி என்று வந்தால் எடப்பாடி பழனிச்சாமி காணாமல் போய் விடுவார். மாநிலங்களவை எம்.பி. சீட்டு ஜெயக்குமாருக்குக் கிடைக்காததால் தற்போது ஒற்றைத் தலைமை குறித்து பேசுகிறார். இதைத்தானே அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகள் பலரும் ஏற்கனவே சொல்லி வந்தார்கள். ஆனால், அப்போதெல்லாம் இரட்டை தலைமைதான் கட்சிக்கு நல்லது என்று கூறி வந்தவர்தான் ஜெயக்குமார். தற்போது திடீரென ஒற்றைத் தலைமை குறித்து அவர் பேசுகிறார். அதிமுகவின் மூத்த நிர்வாகி பொன்னையனும் தனக்கு மாநிலங்களவை எம்.பி. கிடைக்காததால் பாஜகவை விமர்சித்தார். தற்போது அவரும் பாஜகவுக்கு அடிபணிந்துவிட்டார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பாஜகவுக்கு ஆதரவாக பொன்னையன் கையாலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும். இது நடக்கத்தான் போகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்திலேயே இரண்டு முறை முதல்வராக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம்தான். ஒரு முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடுவில் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதுவுமே தெரியாது. ஓ. பன்னீர்செல்வம் இரண்டு மாநிலங்களவை சீட்டுகளில், விடாப்பிடியாக நின்று ஒரு சீட்டை வாங்கினார். இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரிய அடி விழுந்துள்ளது. சாதிப் பெயரை வைத்து மிரட்டி சி.வி. சண்முகம் ஒரு சீட்டை வாங்கிக் கொண்டார்.
மற்றொரு எம்.பி. சீட்டு உங்களுக்குதான் எனக் கூறி செம்மலை, ஜெயக்குமார் உள்ளிட்ட பல பேரை எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றினார். இதனால் இவர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகி விட்டார்கள். எனவே, அதிமுகவில் இனி எடப்பாடி பழனிச்சாமி பேச்சு எடுபடாது. ஒற்றைத் தலைமை வந்தால் எடப்பாடி பழனிச்சாமி காணாமல் போய் விடுவார்” என்று புகழேந்தி தெரிவித்தார்.