ஒரே நிறுவனத்தில் பயின்ற 2000 பேர் குரூப் 4 யில் அதிக மதிப்பெண் பெற்றது எப்படி? விசாரணை குழு அமைத்திடுக- ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published Mar 28, 2023, 9:35 AM IST
Highlights

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட குரூப் நான்கு போட்டித் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாக வந்துள்ள புகார் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

குரூப் 4 தேர்வு முறைகேடு.?

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் வந்தநிலையில், இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், காலியாக உள்ள 3.5 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தத் தேர்தல் வாக்குறுதியை ஐந்தாண்டுகளுக்குள் நிரப்ப வேண்டுமென்றாலும், ஆண்டிற்கு 70,000 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடையும் நிலையில், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை. மனித வள மேலாண்மைத் துறை என்று பெயர் மாற்றம் செய்தால் மட்டும் போதாது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஊழல்.. பகீர் கிளப்பிய எடப்பாடி.! உண்மையா.? பிடிஆர் சொன்ன விளக்கம்

பணியிடங்கள் நிரப்பவில்லை

மனித வளத்தை மேம்படுத்துவதற்கான, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான, காலிப் பணியிடங்களை ஆண்டுக்காண்டு நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பெரிய அளவில் என்று பார்த்தால், குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான 5,500 பணியிடங்களுக்கும், குரூப் 4 பதவிகளுக்கான 10,000 பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வில் பல குளறுபடிகள் ஏற்பட்டு, மறுதேர்வு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களாலும் வலியுறுத்தப்பட்ட நிலையில், அதனை நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வரவில்லை. இதன் தொடர்ச்சியாக, அண்மையில் குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியிடப்பட்டன.

சந்தேகத்தில் இளைய சமுதாயம்

அந்தத் தேர்வு முடிவுகளில், ஒரே நிறுவனத்தில் பயின்ற 2,000 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளதாகவும், இதேபோல நில அளவர் பணிக்கான தேர்விலும் ஒரே மையத்தில் கிட்டத்தட்ட 700 பேர் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளதாகவும், இதில் முறைகேடுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதுபோன்ற சந்தேகம் இளைய சமுதாயத்தினரிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்காத வகையில் முடிவுகளை அறிவித்து பணியாளர்களை நியமிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உண்டு. ஆனால் தொடர் குளறுபடிகள் நடைபெற்று வருவது வேதனைக்குரியது.

விசாரணை குழு அமைத்திடுக

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளரிடம் விரிவான அறிக்கை கேட்டு இருப்பதாக மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தெரிவித்து இருக்கிறார். விளக்கம் கேட்பது என்பதைவிட விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். அப்பொழுதுதான் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும். முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறதா என்பது குறித்து ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு, அதற்கேற்ப மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஆசிரியர்களுக்கு 4 மாதமாக ஊதியம் இல்லை.! இனியும் காலதாமதம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது- அன்புமணி

click me!