
அதிமுகவின் இரு அணிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கலும், முட்டுக்கடையும் இருப்பதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இணைப்பில் யாரும் ஆர்வம் காட்டாததால் தொண்டர்களை சந்திக்க ஓபிஎஸ் ஊர், ஊராக கிளம்புகிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் என அதிமுக இரண்டாக பிரிந்தது. ஆனால் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் சிறை சென்றதையடுத்து இரு அணிகளும் இணையலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதற்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு, முதல் கட்டமாக நடைபெற்ற ரகசிய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை தொடங்கவில்லை.
இந்நிலையில் இரு தரப்பினரும் மாறி,மாறி முரண்பட்ட வகையில் பேசி வருவதால் இணைப்பு சாத்தியமில்லாமல் போய்விட்டதாகவே கருதப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் செம்மலை நடத்திய கூட்டத்தில் தொண்டர்கள் இரு அணி இணைப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதே போல் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் இந்த இணைப்பை விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து இரு அணிகள் இணைப்பு முயற்சி ஏறத்தாழ கைவிடப்பட்டதாகவே தெரிகிறது. இந்நிலையில் மாவட்டம் தோறும் ஊழியர்கள் கூட்டத்தை நடத்திபலத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஓபிஎஸ்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கூட்டம் மே 5 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மே 22 ஆம் தேதிக்குள் 32 மாவட்டங்களிலும் ஊழியர் கூட்டம் நடத்தி முடிக்கப்படும் என ஓபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.