'ராமமோகன ராவுக்கு மீண்டும் பணி...' என்ன சொல்கிறார் ஓபிஎஸ்?

First Published Apr 1, 2017, 12:34 PM IST
Highlights
ops talks about rammohana rao reposting


முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது குறித்து தமிழக அரசு தான் பதிலளிக்க வேண்டும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

வருமான வரித்துறை சோதனையால் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் ராமோகனராவ். ஏறக்குறைய 100 நாட்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று மீண்டும் பணி வழங்கப்பட்டது. தொழில்முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்தச் சூழலில் ராமமோகனராவ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும், அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது குறித்தும் பன்னீர்செல்வம் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். 

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், " ராமமோகனராவ் மீது வருமான வரித்துறை மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை நடந்த போது நான் அங்கு இருந்தேன். அப்போது தலைமைச் செயலகத்திற்குள் சோதனை நடத்த சட்டத்தில் இடம் இருக்கிறாதா? என்று அதிகாரிகளிடம் கேட்டேன். ஆம் என்று  சொன்னதால் அமைதியாகி விட்டேன்.

சோதனையின் போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. முகாந்திரம் இருந்திருந்தால் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள். அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது குறித்து தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. திருப்பதி சென்ற போது தேவஸ்தான உறுப்பினர் என்ற முறையில் அவரை சந்தித்தேன். அவ்வளவு தான்....இவ்வாறு அந்தப் பேட்டியில் பன்னீர்செல்வம்  தெரிவித்தார். 

click me!