கோவை எம்எல்ஏ ஆறுகுட்டி, ஒ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சென்றதற்கு, அவர் தானாகவே வந்தார்... தானகவே சென்றார் என ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
மதுரையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நடிகர் கமல்ஹாசன், தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதற்கு உரிய பதிலை, மரியாதை தரும் வகையில் அரசின் பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் கொடுக்க வேண்டும். அவரை தேவையில்லாமல், விமர்சனம் செய்து பேட்டி அளிக்க கூடாது.
நாங்கள், அதிமுகவில் இருந்து விலகி தனி அணியாக செயல்பட்டு வருகிறோம். எங்களது அணிக்கு எம்எல்ஏ ஆறுகுட்டி தானாகவே வந்து சேர்ந்தார். அவராகவே எங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
தற்போது, அவர் தானாகவே, எதிர் அணியில் போய் சேர்ந்துவிட்டார்.ஆறுகுட்டிக்கு உரிய மரியாதை கொடுத்து, எங்கள் அணியில் வைத்து இருந்தோம். அவர், எங்கள் அணியில் இணையும்போது மரியாதையும், அழைப்பும் கொடுத்து வரவேற்றோம். இப்போது அந்த அணிக்கு சென்றபோது, மரியாதையுடன் அனுப்பி வைத்துள்ளோம்.
தமிகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு உடனடியாகக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.