ஓபிஎஸ் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் !! கல்வெட்டையும் நீக்க வேண்டும் .. தங்க தமிழ் செல்வன் ஆவேசம் !!

By Selvanayagam PFirst Published May 17, 2019, 11:03 AM IST
Highlights

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே கல்வெட்டில் தனது பெயருக்குப் பின்னால் தேனி தொகுதி எம்.பி. என போட்டுக் கொண்ட துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ன் மகன் ரவீந்திரநாத் குமாரின் செயலுக்கு  அமமுக பொருளாளர் தங்க தமிழ்செல்வன் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளதுடன், உடனடியாக அந்த கல்வெட்டை நீக்க வேண்டும் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
 

தேனியில் குச்சனூர் என்ற இடத்தில் சனிஸ்வர பகவான் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் காசி அன்னபூர்ணி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகப் பணிகளுக்கு அதிக நன்கொடைகள் அளித்த பட்டியல் கோயில் நிர்வாகம் சார்பில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கல்வெட்டில் மூன்று முக்கியமான பெயர்கள் ஹைலைட் டாக இடம் பெற்றுள்ளன,

அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவருடைய மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரை தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக ஓ.பி.ஜெயபிரதீப் குமார் என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். வரும் 23 ஆம் தேதி தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன…

இந்நிலையில் தேர்தல் முடிவே அறிவிக்கப்படாத நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. என்று குறிப்பிட்டு துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பெயரை காசி அன்னபூர்ணி ஆலய கல்வெட்டில் பொறித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இந்நிலையில் ரவீந்திரநாத் குமாரின் செயலுக்கு அமமுக பொருளாளரும், தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளருமான தங்க தமிழ் செல்வன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் போவதாகவும் தங்க தமிழ் செல்வன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

click me!