இரு அணிகள் இணைப்பு குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படவில்லை என ஒ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர் மாஃபாபாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் எடப்பாடி அணியும், ஒ.பி.எஸ் அணியும் இணையும் என்று எதிர்பார்த்த நிலையில், எடப்பாடி பேச்சினாலையே அதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒ.பி.எஸ் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எடப்பாடி தரப்பு மறுப்பு தெரிவித்து வந்தது.
அதற்கு ஒ.பி.எஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை என கண்டிப்புடன் கூறிவிட்டார்கள் ஒ.பி.எஸ் தரப்பினர்.
இதனிடையே தேவையில்லாத கருத்துகளை யாரும் தனிப்பட்ட முறையில் கூறகூடாது என எடப்பாடி தரப்பில் வரைமுறை வைக்கப்பட்டது.
அதனால் இ.பி.எஸ் தரப்பினர் சற்று அடக்கி வாசித்தனர். இந்நிலையில், தற்போது எடப்பாடியே ஒ.பி.எஸ் வராவிட்டாலும் பரவா இல்லை என்ற வார்த்தை விட்டுள்ளார்.
இதனால் ஒ.பி.எஸ் தரப்பு கொந்தளித்து போய் உள்ளது. தங்களது பலத்தை நிரூபிப்பதற்காக ஒ.பி.எஸ் வரும் 5 தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், ஒ.பி.எஸ் வீட்டில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூடத்திற்கு பிறகு மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இரு அணிகள் இணைப்பு குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படவில்லை என தெரிவித்தார்.