தேனி தொகுதியில் மகனுக்காக ஓ.பி.எஸ் போட்ட திட்டம்... கதறும் தங்க தமிழ்செல்வன்..!

By Thiraviaraj RMFirst Published May 9, 2019, 4:06 PM IST
Highlights

தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு அவசியமற்றது. அப்படி நடத்தினால் ஓ.பி.எஸ்  சூழ்ச்சி செய்து விடுவார் என அமமுக கொள்கைப்பரப்பு செயலாளரும், தேனி மக்களவை வேட்பாளருமான தங்க தமிழ்செல்வன் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு அவசியமற்றது. அப்படி நடத்தினால் ஓ.பி.எஸ் லட்சக்கணக்கில் பணம் பட்டுவாடா மூலம் சூழ்ச்சி செய்து விடுவார் என அமமுக கொள்கைப்பரப்பு செயலாளரும், தேனி மக்களவை வேட்பாளருமான தங்க தமிழ்செல்வன் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

தேனி மக்களவை தொகுதி, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் கம்மவர் சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 67 தேனி மக்களவை தொகுதி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி சங்கரநாராயணா நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 197-ல் மறுவாக்குப் பதிவு 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், ’’தேனி தொகுதியில் குளறுபடிகள் ஏதுமின்றி தேர்தல் நடந்த நிலையில் 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது தேவையற்றது. தேனி தொகுதியில் மறுவாக்குப்பதிவு அவசியமற்றது. இந்த மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள இரண்டு வாக்குச்சாவடிக்கு உட்பட்டவர்களுக்கு ஓ.பி.எஸ் பணத்தை வாரி இறைத்து தனது மகனுக்கு சாதகமாக்கிக் கொள்வார். இதற்காக லட்சக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட வாய்ப்புள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இரைத்து வருகின்றனர். அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. திமுகவில் தான் இணையப்போவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. என்றுமே திமுக எங்களுக்கு எதிரி. எடப்பாடி பழனிச்சாமி எங்கள் துரோகி’’ என அவர் குற்றம்சாட்டினார்.
 

click me!