மின் கட்டணத்திற்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்… தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!!

Published : Dec 26, 2021, 03:24 PM IST
மின் கட்டணத்திற்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்… தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!!

சுருக்கம்

மின் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மின் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குறித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது வைத்துவிட்டு, தற்போது முதலமைச்சராக பதவிக்கு வந்த பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வசூலிக்காத இனங்களுக்கு எல்லாம் வரி வசூலிக்க உத்தரவிட்டு வருவது திமுகவின் இரட்டை நிலைப்பாட்டிற்கு மற்றுமொரு உதாரணம். சென்ற மாதம் இடமாற்று சான்றிதழுக்கான கட்டணம், உண்மை தன்மை சரிபார்ப்பு சான்றிதழுக்கான கட்டணம் ஆகியவற்றின் மீது 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரியும்; மதிப்பெண் பட்டியல், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்டச் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணத்தில் 18 விழுக்காடு வரியும்; தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெற செலுத்தும் கட்டணத்தில் 18 விழுக்காடு வரியும்; விடைத்தாளின் நகலினை பெறுவதற்கான கட்டணத்தில் 18 விழுக்காடு வரியும் வசூலிக்க அறிவுறுத்தி அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சுற்றறிக்கையை அதன் இணைப்புக் கல்லூரிகளுக்கு அனுப்பியது. இதனைக் கண்டித்து நான் அறிக்கை விடுத்ததோடு, இந்த வரிச்சுமை பெற்றோர்கள் தலையில் விழாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

ஆனால், இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் தற்போது மின் பயன்பாடு கட்டணம் தவிர பிற கட்டணங்களுக்கு 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்படுவதாக ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் பதிவுக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், மீட்டர் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு கட்டணம், மின் துண்டிப்புக் கட்டணம் என பலவகையான கட்டணங்களை வசூலித்து வருகிறது என்றும், எந்தக் கட்டணத்திற்கும் இதுவரை பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வசூலிக்கப்படவில்லை என்றும், ஆனால், திமுக ஆட்சியில் இதற்கு 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வசூலிக்கப்படுவதாகவும், 2017 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி பொருட்கள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு வந்ததிலிருந்து இதுநாள் வரை வசூலிக்கப்படாதவர்களிடமிருந்தும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நுகர்வோர் சந்தேகம் எழுப்பினால் தெளிவுபடுத்த மின் துறை பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் மின் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. மின் பயனீட்டிற்கான கட்டணத்திற்கும் ஒரு சில நேர்வுகளில் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து மின் வாரிய அலுவலர்களிடம் கேட்டதற்கு அவர்களால் விளக்கம் தர இயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. இந்தச் செய்தியைக் கேட்டு பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

கொரோனாத் தொற்றின் தாக்கம் ஓரளவு குறைந்தாலும், ஒமைக்ரான் தொற்று நோய்த் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதைக் கண்டு ஐயமுற்றிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு இரட்டிப்பு அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் தலைப்புச் செய்தியாக மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்ததோடு, கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் என்பது 300 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், விசைத்தறி நெசவார்களுக்கு 1000 யூனிட்டாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தேர்தல் அறிக்கையில் இல்லாத ஒன்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக் குழுமம் சொல்கிறது என்கிற காரணத்தைக் காட்டி திமுக அரசு மக்கள் மீது கூடுதல் சுமையை திணிப்பது ஏற்கத்தக்கதல்ல. திமுகவின் இந்த மக்கள் விரோத அறிவிப்பிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் மவுனமாக இருக்காமல் உடனடியாகத் தலையிட்டு மின் கட்டணங்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வசூலிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், இதனை நிரந்தரமாக ரத்து செய்யத் தேவையான நடவடிக்கையை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!