முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சிங்கப்பூர் மற்றும் சீனா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்தமாதம் 28 ஆம் தேதி முதல் இம்மாதம் 10 ஆம் தேதி வரை இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப் பயணத்தின்போது 8 ஆயிரத்து 365 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அவருடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி , எம்.சி.சம்பத் உள்ளிட்ட அமைச்சர்களும் உடன் சென்றிருந்தனர். இந்த பயணத்தின் போது பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதே போல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைசசர் திண்டுக்கல் சீனிவாசன், சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கும் சென்று வந்தனர்.
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்டுமான தொழில் குறித்து ஆய்வு செய்வதற்காக அவர் சிங்கப்பூர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. முதலில் சிங்கப்பூர் செல்லும் ஓபிஎஸ், அங்கிருந்து சீனா அல்லது இந்தோனேசியாவிற்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.