சிறப்பு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ் - இபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Aug 24, 2021, 4:16 PM IST
Highlights

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி அக்கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் மீது எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதால் ஆஜராக விலக்கு கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சமீபத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அதிமுகவை விமர்சித்து இருந்தார். இதனால், அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி, ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வது, தேர்தல் தோல்விக்கு பின் மற்றவர்களை விமர்சனம் செய்வது பாமகவின் வாடிக்கையாக உள்ளது என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டார்.  

இதனையடுத்துஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி அக்கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் மீது எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருவரும் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலீசியா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதால், நேரில் ஆஜராக முடியவில்லை எனவும், அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் என்பதால், ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல, வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனு உயர்நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

மனுதாரர் புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜரானார். ஆஜராகாததற்கான காரணம் நியாயமானதுதான் என தெரிவித்த நீதிபதி, எனினும் வழக்கின் முதல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டியது கட்டாயம் என்பதால், நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். செப்டம்பர் 14ம் தேதி  இருவரையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

click me!