
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை விரைந்து தேர்வு செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஏதுவான இடங்களாக தமிழக அரசு 5 இடங்களை தேர்வு செய்து மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
பெருந்துறை (ஈரோடு), செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), தோப்பூர் (மதுரை), செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு 31.10.2014-ல் பட்டியல் அனுப்பப்பட்டது. இந்த இடங்களை மத்திய குழு ஆய்வு செய்துள்ளது. ஆனால், இவற்றில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்பதை மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.
2018ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை மத்திய அரசு அறிவிக்கவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாததால், மத்திய சுகாதாரத்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது.
தமிழக அரசு கோரிக்கை விடுத்தும், நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் இடத்தை மத்திய அரசு இதுவரை தேர்வு செய்து அறிவிக்கவில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஏதுவான இடங்கள் பட்டியலை தமிழக அரசு, கடந்த 2014ம் ஆண்டே சமர்ப்பித்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் நடந்த பட்ஜெட் முந்தைய கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழகத்தின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான பன்னீர்செல்வம், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தேர்வு செய்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்குமா என்பதை பட்ஜெட் கூட்டத்தொடரில்தான் அறிந்துகொள்ள வேண்டும்.