ஓபிஎஸ் தம்பி உள்ளே... தங்கதமிழ்செல்வன் வெளியே... கலக்கத்தில் டிடிவி கூடாரம்!

By vinoth kumarFirst Published Dec 21, 2018, 11:40 AM IST
Highlights

ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா டிடிவி தினகரன் அணிக்கு தாவ உள்ளதாக பரபரப்பு எழுந்துள்ள நிலையில், அமைச்சர் தங்கமணியுடன், அமமுக முக்கிய நிர்வாகி தங்கதமிழ்செல்வன் மீண்டும் ரகசியமாக சந்தித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா டிடிவி தினகரன் அணிக்கு தாவ உள்ளதாக பரபரப்பு எழுந்துள்ள நிலையில், அமைச்சர் தங்கமணியுடன், அமமுக முக்கிய நிர்வாகி தங்கதமிழ்செல்வன் மீண்டும் ரகசியமாக சந்தித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கும், மூத்த தலைவர் தங்கதமிழ்செல்வனுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. 18 எம்எல்ஏக்களின் பதவி பறிப்பு விவகாரத்தில்தான் இருவருக்கும் இடையே கடுமையான மோதல் எழுந்துள்ளது. இருவரும் வேறு வேறு கருத்துக்களை கூறி தொண்டர்களை குழப்பி வருகின்றனர். 

இந்த தகவல் தெரியவந்ததால் சசிகலா, மாஜி எம்எல்ஏக்கள் 12 பேரை அழைத்து விசாரித்தார். ஒவ்வொருவரையும் தனித்தனியாகத்தான் விசாரித்தார். கடைசியாக தினகரனையும் விசாரித்தார். அப்போது தங்கதமிழ்செல்வனையும், தினகரனையும் அவர் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் தங்கதமிழ்செல்வன், சமாதானம் அடையவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இதனால் அவர் அமமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் வெளியானதும் அமைச்சர் தங்கமணி, சென்னையில் உள்ள ஓட்டலில் தங்கதமிழ்செல்வனை ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்துதான் நான் அரசியல் செய்கிறேன். தற்போது அவர் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். எப்படி அவரை எதிர்த்து நான் வேலை செய்ய முடியும். இருவரும் எப்படி ஒன்று சேர முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

அப்போது அமைச்சர் தங்கமணி, அண்ணன் ஓ.பி.எஸ்சுடன் பேசிய பின்னர்தான் உங்களை சந்திக்கிறேன். அவர் பழையதை மறந்து விட்டார். இருவரும் இணைந்து செயல்படுவதாக அவர் கூறிவிட்டார் என்று கூறிய தங்கமணி, திடீரென்று போனை ஓ.பிஎஸ்சுக்கு போட்டு தங்கதமிழ்செல்வனிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் போனில் பேசியுள்ளனர். அப்போது தம்பி பழையதை மறந்து விடுங்கள். இருவரும் அதிமுக வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்று ஓபிஎஸ் கூறியதாக கூறப்படுகிறது. 

இந்த தகவல் வெளியானதால்தான் ஓபிஎஸ் தம்பி ராஜா, தினகரன் அணிக்கு தாவ முடிவு செய்து, அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரைவில் தங்கதமிழ்செல்வன், தன்னுடைய ஆதரவாளர் டாக்டர் கதிர்காமுவுடன் சேர்ந்து அதிமுகவில் இணைவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரிக்க தங்கதமிழ்செல்வனை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் ஆப் செய்யப்பட்டிருந்தது.

click me!