திமுகவை நம்பாதீங்க... வன்னிய இனத்துரோகி ஆகிடாதீங்க... செல்வக்கணபதிக்கு பகீர் மடல்..!

By Thiraviaraj RMFirst Published Feb 7, 2020, 2:02 PM IST
Highlights

திமுக- வுக்குச் சென்று இத்தனை நாள் உங்களை மதிக்காத ஸ்டாலின் இன்று 'தனக்கு சேலத்தில் வலி' என்றவுடன், உங்களைத் தேடிப்பிடித்து, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் பதவி தருகிறார். 

சேலம் மாவட்டத்திற்கு திமுக மாவட்டச் செயலாளராக புதிதாக பதவி ஏற்றுள்ள செல்வக்கணபதிக்கு அவரது நலம் விரும்பி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ’’தாங்கள் வன்னியர் படையாட்சி பட்டத்தில், "கடந்தையார் வகையறா" என்ற வகையில், எனக்கு பங்காளி முறை ஆவீர்கள். ஆகவே, தங்களிடம் அன்புடனுடனும், உரிமையுடனும் வேண்டுகோள் விடுக்க தகுதி உள்ளது எனக் கருதுகிறேன். ஜெயலலிதாவின் அருகில் இருந்து, 'முக்குலத்தோர் நலனை' காப்பாற்றிக் கொண்டிருந்த 'மாஃபியா கும்பல் தலைவி' சசிகலாவுக்கும், அவரது தூபத்துக்கு பலியான ஜெயலலிதாவுக்கும், வாழப்பாடியார் 'வன்னியரில் பெருந்தலைவராக' உருவெடுத்து வந்தது வயற்றெரிச்சலைக் கிளப்பியது.

ஆகவே, அவரை வீழ்த்த சசிகலா கும்பல், உங்களை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டது. நீங்கள் 1999- இல், வாழப்பாடியாரைத் தோற்கடித்து, சேலம் எம். பி ஆனீர்கள். வாழப்பாடியார் "மத்திய கேபினட் அமைச்சராகி" வன்னியருக்கும், தமிழகத்திற்கும் செய்ய இருந்த நன்மைகள் ஒரே நாளில் தவிடு பொடியாகின! அவர் தோற்றதால், வன்னிய இனத்திற்கு கிடைக்க வேண்டிய ஒரு "மத்திய கேபினட் மந்திரி" கிடைக்காமல், நழுவிப் போனது.

அன்று நீங்கள் வென்றதால், "செல்வகணபதி, ஜெயலலிதா காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்!" என்ற ஒற்றை வரி செய்திதான், பத்திரிகைகளில் வெளியானது. வேறு ஒரு பலனும் இல்லை. அதன்பிறகு ஜெ- வுக்கு எவ்வளவோ 'விஸ்வாசமாக' நீங்கள் இருந்துகாட்டியும், உங்கள் 'கறிவேப்பிலை வேலை' முடிந்ததால் உங்களை மன்னார்குடி மாஃபியா கும்பல் ஓரங்கட்டியது.

அதன்பிறகு மரியாதை வேண்டி, திமுக- வுக்கு மாறினீர்கள்! இங்கும் ஸ்டாலினும் சசிகலாவைப் போலவே உங்களை, 'வன்னியரைக் கருவறுக்கும் கோடாலிக்காம்பாகவே' பயன்படுத்தினார். தர்மபுரி தொகுதியில், அன்புமணியைத் தோற்கடிக்க, வன்னியரில், அடுத்த 'கேபினட் மந்திரி' வராமல் அடிக்க, உங்களை அத்தொகுதி கண்காணிப்பாளராகப் போட்டார். நீங்கள் உண்மையிலேயே, வன்னிய சமுதாய அக்கறை உள்ளவராக இருந்திருந்தால், அன்று நீங்கள் அப்பொறுப்பை மறுத்திருக்க வேண்டும். ஆனால், "அற்ப பதவி ஆசைக்காக" கேபினட் மந்திரி ஆக வேண்டிய அந்த அடுத்த ஆளை, காலி பண்ணினீர்கள்!

அது உங்களால் நடந்ததா? ஓட்டு மெஷினால் நடந்ததா? என்பது வேறு விஷயம்! நடந்துவிட்டது. திமுக- வுக்குச் சென்று இத்தனை நாள் உங்களை மதிக்காத ஸ்டாலின் இன்று 'தனக்கு சேலத்தில் வலி' என்றவுடன், உங்களைத் தேடிப்பிடித்து, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் பதவி தருகிறார். அதுவும் உங்கள் நாமக்கல் மாவட்டத்தில் தராமல் இங்கு தருகிறார். எடப்பாடியாரைத் தீர்த்துக் கட்ட,  "துரோகக் காளை"யாக உங்களை 'கூர்சீவி' விடுகிறார். எடப்பாடியார் வன்னியர் இல்லைதான். கொங்கு வேளாளரே! இருந்தபோதும், அவர்தான், வன்னியர் பொது சொத்து நல வாரியம் அமைத்திருக்கிறார்.

படையாட்சியாருக்கு சட்டமன்றத்தில் படம் திறந்து, கடலூரில் மணிமண்டபம் கட்டி இருக்கிறார். நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ.40 கோடி தந்துள்ளார். கொள்ளிடத்தில் நாகை- கடலூர் இடையே தடுப்பணை கட்ட ரூ.408 கோடி ஒதுக்கி இருக்கிறார். வடதமிழ்நாட்டில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி என 4 புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தியுள்ளார். அரியலூருக்கும் சேர்த்து மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வருகிறார். பாலாற்றில் வாயலூரில் தடுப்பணை கட்டி உள்ளார்.

உங்கள் சேலம் மாவட்டத்தில், மேட்டூர் வெள்ள உபரி நீரேற்று திட்டத்துக்காக ரூ.565 கோடி ஒதுக்கி உள்ளார். கங்கவல்லி ஒன்றியம் "பொன்னி ஓடை" குறுக்காக பெரிய ஏரி கட்ட ரூ. 27 கோடி ஒதுக்கியுள்ளார். தலைவாசலில் ரூ.1000 கோடியில் "கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பல்கலைக்கழகம்" அமைக்க உள்ளார். சேலம் மாநகராட்சியில் ரூ. 1000 கோடி செலவில், நீண்டகால போக்குவரத்து நெருக்கடியை முடிவு கட்ட "ஈரடுக்குப் பாலம்" கட்டி முடித்துள்ளார்.

சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு ரூ.174 கோடியும், பழய நிலையத்துக்கு ரூ.74 கோடியும் ஒதுக்கி மேம்படுத்தி உள்ளார்.வனவாசியில் பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வந்துள்ளார். பெத்தநாயக்கன்பாளையத்தில் "கரியக்கோவில் அணைக்கு" கைக்கான்வளவு காட்டாற்று உபரி நீரைக் கொண்டுவர, ரூ. 7 கோடி ஒதுக்கி உள்ளார். இவை எல்லாம் ஊரை ஏமாற்றும் 'இலவச திட்டங்கள்' அல்ல; நிரந்தர வளர்ச்சிக்கான திட்டங்கள்!

இப்படி  எண்ணற்ற நன்மைகள் செய்தவரை, செய்யப்போகிறவரை, கேவலம்,  சிறிய பதவிக்காக வீழ்த்த, ஸ்டாலினின் கைத்தடியாக பயன்படப் போகிறீர்களா? இத்தனை நன்மைகளை, இவ்வளவு குறுகிய காலத்தில், கருணாநிதியோ, திமுக- வோ செய்தது உண்டா? நன்றாக ஒரு முறைக்கு பலமுறை, யோசித்துப் பாருங்கள்! ஸ்டாலின் நயவஞ்சக வேலையை உதறி எறியுங்கள். நல்லவர்களுடன் நில்லுங்கள்.  ஸ்டாலின் முஸ்லீம்களைத்தான் மிகவும் நேசிக்கிறார். ஓட்டுக்காக அவர்களைத்தான் ரொம்பவும் நம்புகிறார்.
   
அவர்களில் ஒருவரை, வாழப்பாடியாருக்கு எதிராக நிறுத்தி, அவர் காரியத்தை அவர் சாதிக்கட்டுமே. நீங்கள் வெளியேறுங்கள். வன்னியர் நலனையும், மானத்தையும் காப்பாற்றுங்கள். ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தல் வரை உங்களை கறிவேப்பிலையாக பயன்படுத்திக்கொண்டு, எத்தனையோ 'திமுக வன்னிய தலைவர்களை' காரியம் முடிந்ததும், தூக்கி எறிந்தது போல உங்களையும் விசிறி எறிவார்!

ஸ்டாலின் "பக்கா வன்னிய விரோதி! தெலுங்கர் காவலன். இதை நீங்கள் செய்யத் தவறினால், வருங்கால வன்னியர் வரலாறு, உங்களை ஒரு வன்னிய, தமிழர் "இனத்துரோகி" யாவே பச்சையாக சித்தரிக்கும். வரலாற்றின் நல்ல பக்கங்களில், இடம் பெற முயலுங்கள்’’என அந்த மடலில் தெரிவித்துள்ளார். 

click me!