ஆன்லைன் ரம்மி மரணம்! வெறும் விளம்பரத்துக்காக அறிவிப்புகள் வெளியிடாதீங்க முதல்வரே! இறங்கி அடிக்கும் அண்ணாமலை.!

By vinoth kumarFirst Published Jun 29, 2023, 6:43 AM IST
Highlights

தென்காசி சங்கரன்கோவில் அருகே, மாரிசெல்வம் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் குடும்பத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம் (25). இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மாரிச்செல்வம் கடந்த 2 வருடங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 15 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாரிச்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அவசர சட்டம் கொண்டு வந்தும், அதனை முழுமையாக நிறைவேற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்காததால், மீண்டும் ஒரு உயிர் பலியாகியிருக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- முட்டாள்தனமான கேள்வி... நான் என்ன காமெடியானா? செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை ஆவேசம்

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தென்காசி சங்கரன்கோவில் அருகே, மாரிசெல்வம் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இணைய விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த, தமிழ்நாடு இணைய விளையாட்டு ஆணையம் ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும், அதன் தலைவராக, தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்குக் குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரியும், ஐஜி அந்தஸ்துக்குக் குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, சிறந்த உளவியலாளர் உட்பட ஐந்து பேர் கொண்ட ஆணையம் உருவாக்க இருப்பதாகவும் திமுக அரசு கூறியிருந்தது. ஆனால், இரண்டு மாதங்கள் கடந்தும், அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

பிரச்சினைகளுக்கான உண்மையான தீர்வுகளைப் பற்றிச் சிந்திக்காமல், கண்துடைப்புக்காக அறிவிப்புகள் வெளியிட்டு விட்டு, அதன் பின்னர், தங்கள் தோல்வியை மறைக்க, மக்களைத் திசைதிருப்பும் நாடகத்தைத்தான் ஆட்சிக்கு வந்தது முதல் அரங்கேற்றி வருகிறது இந்தத் திறனற்ற திமுக அரசு. 

இதையும் படிங்க;-  "என்ன தான் குவாட்டர், பிரியாணி குடுத்தாலும் இந்த அன்பு கிடைக்காது” லண்டனில் நெகிழ்ந்து போன அண்ணாமலை..

அவசரச் சட்டம் கொண்டு வந்தும், அதனை முழுமையாக நிறைவேற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்காததால், மீண்டும் ஒரு உயிர் பலியாகியிருக்கிறது. வெறும் விளம்பரத்துக்காக அறிவிப்புகள் வெளியிடாமல், இனியாவது தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார். 

click me!