போலீஸாரால் கைதான நான் இன்று அத்துறைக்கு பொறுப்பேற்று நடத்தி வருகிறேன்… மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

By Narendran SFirst Published May 25, 2022, 9:43 PM IST
Highlights

போலீஸாரால் கைதான நான் இன்று அத்துறைக்கு பொறுப்பேற்று நடத்தி வருவது பெருமையாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

போலீஸாரால் கைதான நான் இன்று அத்துறைக்கு பொறுப்பேற்று நடத்தி வருவது பெருமையாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75 ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், இந்த ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு கல்லூரியாக இருந்திருக்கிறது. இருக்கிறது, இருக்கவும் போகிறது. அதற்குக் காரணம், நான் சேத்துப்பட்டில் இருக்கக்கூடிய ஹாரிங்டன் ரோட்டில் அமைந்திருக்கக்கூடிய எம்.சி.சி பள்ளிக்கூடத்தில் தான் என்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தேன். கோபாலபுரத்தில் இருக்கக்கூடிய என்னுடைய வீட்டிலிருந்து அந்தப் பள்ளிக்கு நான் போவதற்கு, கோபாலபுரத்திலிருந்து நடந்து வந்து, இந்த ஸ்டெல்லா மேரிஸ் பஸ் ஸ்டாண்டிலே தான் நின்று 29சி பேருந்தில் ஏறி பள்ளிக்குச் செல்வேன். இங்கு இருந்து ஏறி நுங்கம்பாக்கத்தில், ஹாரிங்டன் ரோடில் இறங்கி, அதற்குப் பிறகு நான் என்னுடைய பள்ளிக்கு செல்வேன்.

அங்கிருந்து, ஸ்டெர்லிங் ரோடில் பஸ் ஏறி, இந்த ஸ்டெல்லா மேரிஸ் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அதற்குப் பிறகு தான் நான் வீட்டுக்குப் போவேன். ஆக, அதுதான் மறக்க முடியாக நிகழ்ச்சியாக இன்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதே 29சி பேருந்தில்தான் 15 - 20 நாட்களுக்கு முன்பு கூட நான் வழியிலே நிறுத்தி ஏறி, அந்தப் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யக்கூடிய திட்டத்தை நான் ஆய்வு செய்தேன். இன்னொரு செய்தியையும் நான் சொல்லியாக வேண்டும். 1971ஆம் ஆண்டு தேர்தலில் திமுக மீண்டும் கருணாநிதி தலைமையில் வெற்றி பெற்ற போது, அந்தத் தேர்தலை ஒட்டி நான் பிரச்சார நாடகங்களில் நடித்தேன். ஏறக்குறைய 40 நாடகங்கள் தமிழகம் முழுவதும் நடத்தினேன். ஆட்சிக்கு வந்த பிறகு 1971 ஆம் ஆண்டு வெற்றி விழா நாடகத்தை சென்னையில் நடத்தினேன். அதற்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையேற்க வந்தார். முன்னிலைப் பொறுப்பை எம்.ஜி.ஆர் ஏற்றார். அதற்காக விளம்பரம் செய்வதற்காக, அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னை நகரம் முழுவதும் சுவரொட்டிகளை நாங்கள் ஒட்டினோம். விடிய, விடிய எல்லாப் பகுதிகளிலும் ஒட்டிவிட்டு, கடைசியாக ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் நான் உட்கார்ந்திருக்கிறேன். என்னோடு வந்த தோழர்கள் எல்லாம் வரிசையாக ஒட்டிக் கொண்டு வருகிறார்கள். நான் கொஞ்சம் கண் அயர்ந்து சைக்கிள் ரிக்ஷாவில் படுத்து உறங்கி விட்டேன். விடியற்காலை 4 மணி இருக்கும்.

இந்த ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியினுடைய காம்பவுண்ட் சுவரில் என்னோடு வந்த தோழர் ஒருவர் சுவரொட்டி ஒட்டி விட்டார். அப்போது காவலுக்காக வெளியில் இருந்த ஒரு காவலர் இங்கே ஒட்டக்கூடாது என்று அந்த தோழரிடம் வாதம் நடத்த, அதற்குப் பிறகு தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துவிட்டார். அங்கிருந்து காவலர்கள் வந்து எங்களைக் கடுமையாகக் கண்டித்து, காவல் நிலையத்தில் எங்களை அழைத்து சென்று உட்கார வைத்தார்கள். அப்போதும் நான் யார் என்று சொல்லவில்லை, சொல்லவும் விரும்பவில்லை. அப்படி நான் அப்பா பெயரை பயன்படுத்துபவனும் அல்ல. அதற்கு பிறகு அவர்களாகவே தெரிந்து கொண்டு எங்களை வெளியில் அனுப்பிவிட்டார்கள். எதற்காக சொல்கிறேன் என்றால், ஒரு காவலரால், நான் கண்டிக்கப்பட்டு, என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து அனுப்பி வைத்தார்கள். இன்றைக்கு இந்த காவல்துறைக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு, முதலமைச்சாராகவும் பொறுப்பேற்று, இந்தக் கல்லூரிக்கு வந்து உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்தார். 

click me!