Omicron in Tamilnadu: தமிழகத்தில் தீயாக பரவும் ஒமைக்ரான்.. சென்னையில் மத்திய குழு அதிரடி ஆய்வு..

By Ezhilarasan BabuFirst Published Dec 28, 2021, 10:30 AM IST
Highlights

இந்த நிலையில் நேற்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

மத்திய மருத்துவக்குழு இரண்டாவது நாளாக இன்று சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறார்கள். ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்தும், அதன் பரவல் குறித்தும் ஆய்வு செய்வதற்காக மத்திய மருத்துவ குழு வல்லுநர்கள் டாக்டர் வனிதா, புர்பசா, சந்தோஷ் குமார்,தினேஷ் பாபு ஆகிய நான்கு போ் கொண்ட மத்திய மருத்துவ குழுவினா் டெல்லியிலிருந்து கடந்த 26 ஆம் தேதி இரவு சென்னை வந்தனர். சென்னை வந்துள்ள மத்திய குழு தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து ஐந்து நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். 

கடந்த 2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரையில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் ஒட்டு மொத்த உலகமும் திண்டாடி வருகிறது. தடுப்பூசி மட்டுமே இந்த வைரஸில் இருந்து காப்பாற்றும் என்ற முனைப்பில் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து இதை மக்களுக்கு விநியோகித்து வருகிறது.தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது, தடுப்பூசிகள் உயிர்காக்கும் நிவாரணியாக இருந்துவருகிறது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதேநேரத்தில் கொரோனா வைரஸ் அடிக்கடி பிழவுகளுடன் உருமாறி வருகிறது. கொரோனா என்பது டெல்டா வைரஸ் ஆக உருமாறி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அது முதல் அலையில் இருந்து இரண்டாவது அலையாக உருவெடுத்தது. தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு டெல்டா வகை வைரஸ் அதிக பிறழ்வுகளுடன் உருமாறியுள்ளது. இதுவோ ஒமைக்ரான் வைரஸ் ஆக உள்ளது. இந்த வைரஸ் முதன் முதலில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்தே அடையாளம் காணப்பட்டது. இது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் வெகு வேகமாக பரவக்கூடியது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஓமைக்கிரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் நேற்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதலாவது நாளாக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையம் ( War room ), மாநில தடுப்பூசி கிடங்கு மற்றும் மரபணு பரிசோதனை மையத்திலும் ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து பிற்பகலில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனையும் மற்றும் கிங்ஸ் மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதனையும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று இரண்டவது நாளாக, சென்னை வளசரவாக்கம் கற்பகாம்பாள் நகரில் முதலாவது ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர் இல்லம் மற்றும் அங்கு இருக்கக்கூடிய பகுதிகளை மத்திய  குழுவினர் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.  

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தையும் அதனை செயல்பாடுகளையும் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.  மேலும், இன்று பிற்பகலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொள்கிறார்கள். ஓமைக்ரான் வகை வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. தற்போதுவரை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 653 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 34 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 16 பேர் சிகிச்சையில் உள்ளனர், 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 

click me!