டி.டி.வி.தினகரனின் வலது கரத்துக்கு அதிமுகவில் முக்கியப்பதவி... ஓ.பி.எஸ்- எடப்பாடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Apr 20, 2020, 2:12 PM IST
Highlights

அதன்பிறகு, தினகரனின் வலதுகரம்போல செயல்பட்டு வந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில், பல்வேறு டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த புகழேந்திக்கு முக்கிய பதவி கொடுத்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸும் அறிவித்துள்ளனர். 

ஜெயலலிதா உயிரோடு இருந்த காலம் வரை, கர்நாடக மாநில அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தவர் புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது, இவர் சசிகலா-டிடிவி தினகரன் தரப்பில் இணைந்து கொண்டார். அதன்பிறகு, தினகரனின் வலதுகரம்போல செயல்பட்டு வந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில், பல்வேறு டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இந்த நிலையில்தான், மக்களவை தேர்தலுக்கு பிறகு தங்க தமிழ்ச்செல்வன் போன்ற தினகரனின் தீவிர ஆதரவாளர்கள் அமமுக கட்சியில் இருந்து விலகினர். தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதேபோல புகழேந்தியும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பாக சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கே சென்று சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார் புகழேந்தி.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து இன்று அதிமுக செய்தித் தொடர்பாளராக வா.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். 

click me!