
அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அஇஅதிமுக கட்சியின் பெயர், அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி, அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில்;- பொதுச்செயலாளர் என என்னை தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாக உள்ளது. எனவே அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ கட்சியின் கொடியையோ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதான உரிமையியல் வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்;- உச்ச நீதிமன்றம் வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கியது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சி சின்னம், கொடியை பயன்படுத்தி வருவதாகவும், கட்சி உறுப்பினர் என கூறி வருவதாகவும், கட்சி லெட்டர்பேடை சட்டவிரோதமாக பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் வாதிடப்பட்டது. மனுவுக்கு பதிலளிக்க குறுகிய அவகாசம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க ஓபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.