முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு
அமைத்துள்ளது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் தோட்டத்தில் பணியாற்றியவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தனர்.
இதுவரை 300-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 25 ஆம் தேதி அன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மறைந்த ஜெயலலிதா, முதலமைச்சராக இருந்தபோது உளவுத்துறை டிஐஜியாக இருந்தவர் பொன்மாணிக்கவேல்.
மேலும், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனும் மே 25 ஆம் தேதி மீண்டும் ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சாந்தா ஷீலா நாயர், பூங்குன்றன், ராமலிங்கம் ஐஏஎஸ், ஆளுநர் மாளிகை உதவி பிரிவு அலுவலர் சீனிவாசன், ஜெ. பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், மருத்துவர் சிவக்குமார் ஆகியோரிடம் மே 26 ஆம் தேதி அன்று ஆளுமுகசாமி விசாரணை ஆணையம் குறுக்குவிசாரணை நடத்த உள்ளது.