வடமாநிலத்தவர் ஓட்டு... அரசு ஊழியர்கள் வைத்த வேட்டு... அடியோடு மாறும் தமிழக அரசியல் களம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 24, 2021, 10:22 AM IST
Highlights

துறைமுகம் தொகுதியில் வட மாநிலத்தவர்களின் வாக்குகளை பெறுவதற்காக பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகிறது. 

தமிழகத்திற்கு பிழைப்பு தேடி வந்த வெளிமாநிலத்தவர்கள், இங்கேயே வாக்குரிமை, ஆதார் கார்டு, லைசென்சு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசின் அடையாள ஆவணங்களை பெற்று, தற்போது பூர்வீக சென்னைவாசிகளாகவே மாறி விட்டார்கள். சென்னை நகரின் பல இடங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வட மாநிலத்தவர்கள், கிட்டத்தட்ட தமிழர்களாகவே மாறிவிட்டனர்.

சென்னையில் உள்ள துறைமுகம், எழும்பூர், பெரம்பூர், வேளச்சேரி, மாதவரம், தாம்பரம் மற்றும் அண்ணாநகர் சட்டசபை தொகுதிகளில் வாக்குரிமை பெற்ற வட மாநிலத்தவர்கள் கணிசமாக வசிக்கிறார்கள். அவர்களுடைய வாக்குகள், வேட்பாளர்களின் வெற்றி-தோல்விக்கு குறிப்பிட்ட அளவிலான தாக்கத்தை கொடுப்பதாக இருக்கும்.

துறைமுகம் தொகுதியில் குறைந்தது 30 ஆயிரம் பேரும், பெரம்பூர் தொகுதியில் குறைந்தது 20 ஆயிரம் பேரும், அண்ணாநகர் தொகுதியில் குறைந்தது 15 ஆயிரம் பேரும் தமிழ் தாய்மொழி அல்லாத ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த வாக்காளர்கள் இருக்கிறார்கள். சென்னையில் வசிக்கும் தமிழ் பேசாத வாக்காளர்கள் தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கு வாக்களிப்போம்? என்பது குறித்து இரண்டுவிதமான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ராமர் கோவில் கட்டுதல், இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவோம் உள்ளிட்ட பா.ஜ.க.வின் வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் பா.ஜ.க. இடம் பெற்றிருக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் துறைமுகம் தொகுதியில் வட மாநிலத்தவர்களின் வாக்குகளை பெறுவதற்காக பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த வாக்குகள் காரணமாக சென்னையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. 

அதேபோல், ஒவ்வொரு தேர்தலிலும் பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகள் திமுகவிற்கே போகும். இந்த நிலைமையில் தற்போது குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதாக பலரும் கூறுகின்றனர்.

இதுகுறித்து பேசியவர்கள், ‘‘காலம் காலமாகவே நாங்கள் திமுக ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்து வந்தோம். ஏதோ திமுகதான் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் என தவறாக வழிநடத்தப்பட்டதன் விளைவு. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவரும் அதிமுக அரசில் சம்பள உயர்வு உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் எங்களுக்குக் கிடைத்து வருகின்றன. அதிலும் எடப்பாடியின் இந்த நான்காண்டு ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசு உட்பட பல சலுகைகள் கிடைத்துள்ளன.

கொரோனா சமயத்தில் பல மாநில அரசுகள் சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஆனால் எடப்பாடி அரசு இதை செய்யவில்லை. பணிக்குச் செல்லாவிட்டாலும் முழு சம்பளம் தந்தது. இது எல்லாவற்றையும் விட எங்களுக்கு முழுமையான பணி சுதந்திரம் கிடைத்திருக்கிறது. திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு சாதாரண விஷயத்திற்கே பல இடங்களிலிருந்து அழுத்தங்கள் வரும். இப்படி பலவற்றை கூட்டிக் கழித்து பார்க்கும்போது எங்கள் பார்வையில் எடப்பாடி உயர்ந்து நிற்கிறார். இதனால் இந்தமுறை எங்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத்தான்’’ என்று கூறுகிறார்கள்.

click me!