குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு ! போர்க்களமாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள் !!

By Selvanayagam PFirst Published Dec 12, 2019, 5:59 AM IST
Highlights

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு  கடும் எதிர்ப்பு  வலுத்துவருவதால் அசாம்இ திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருன்றனர். இதையடுத்து  வடகிழக்கு மாநிலங்களில் 5 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். கவுகாத்தியில் தலைமைச் செயலகம் அருகில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு போலீசார் பாதுகாப்புக்காக வைத்திருந்த தடுப்புகளை வீசி எறிந்தனர். பல மாணவர்கள் பள்ளி சீருடையிலேயே வந்திருந்தனர்.

முக்கிய சாலைக்குள் நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசாரையும் மீறி அவர்கள் தலைமைச் செயலகத்தில் நுழைய முயன்றதால் போராட்டத்தை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினார்கள். 

அப்போது போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதும், சிறிது நேரத்தில் மீண்டும் கூடுவதுமாக இருந்தனர். போராட்டக்காரர்களும் போலீசாரை கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கினார்கள். இதனால் தலைமைச் செயலகம் முன்பு போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய போராட்டம் பல மணி நேரம் நீடித்தது.

தலைமைச் செயலகம் முன்பு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டு இருந்த பேனர்கள், விளம்பர பலகைகளையும் உடைத்து நொறுக்கப்பட்டன.

திப்ருகாரிலும் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டனர், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினார்கள். இந்த சண்டையில் ஒரு பத்திரிகையாளரும் கல்வீச்சில் காயம் அடைந்தார். அங்கு சாலை மற்றும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

எந்த அமைப்போ, அரசியல் கட்சியோ போராட்டம் அல்லது முழு அடைப்போ அறிவிக்கவில்லை என்றாலும், ஆங்காங்கே தன்னிச்சையான போராட்டங்கள் வெடித்தன. நெடுஞ்சாலைகளில் மரக்கட்டைகளையும், பழைய டயர்களையும் போட்டு எரித்தனர். பல நகரங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. லக்வாவில் எண்ணெய் கிணறு அமைந்துள்ள பகுதியில் போராட்டக்காரர்கள் சிலர் நுழைய முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ரெயில் மறியல் போராட்டம் காரணமாக சுமார் 15 ரெயில்கள் நிறுத்தப்பட்டன அல்லது வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டன. 

இதற்கிடையே அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு 5 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் விமானங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். காஷ்மீரில் பணியில் இருந்த 20 கம்பெனி (2 ஆயிரம் பேர்), மற்ற மாநிலங்களில் பணியில் இருந்த 30 கம்பெனி (3 ஆயிரம் பேர்) உடனடியாக வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த படையில் மத்திய ஆயுதப்படை போலீசார், எல்லை பாதுகாப்பு படை, சாஷ்டிரா சீமா பால் ஆகிய படை பிரிவுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

திரிபுரா மாநிலத்திலும் ஒரு அணி ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒரு அணியில் 70 வீரர்கள் இருப்பார்கள்.

பாதுகாப்பு கருதி 10 மாவட்டங்களில் இணையதள வசதி மற்றும் செல்போன் இணையதள இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணி முதல் 24 மணி நேரத்துக்கு இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

click me!